இன்றைய கதையரங்கத்தில் (மே 11, 2018)
நாமவிவர்ஜிதா
-------------------------
வைகாசிப்பதினேழு, பரிதாபி வருஷம் – 13, மே, 1371:
-------------------------
வைகாசிப்பதினேழு, பரிதாபி வருஷம் – 13, மே, 1371:
” நாமகரணம் ஆய்டுத்தாம் ஓய்!”
”ஓ! ஷேமம் ஷேமம்!”
”ஆச்சாரியாரே அனுக்ரஹம் பண்ணியிருக்காராம் சுவாமி! இன்னிக்கு அழகிய மணவாளர் ஸ்தாபிதம் வேற!”
ஆனாலும் கோவிந்தன் க்ருஹத்துக்கு வந்து “குழந்தைய” ஆசிர்வதிச்சுட்டுத்தானே கோவிலுக்குப் போனார் தேசிகர் சுவாமிகள், தெரியுமோ!”
”இந்த நூறு பிராயத்துக்கப்புறமும் அவாளுக்கு கோவிந்தன் மேல வாத்சல்யம் போகலைன்னா!”
”எப்பிடிப்போகுங்காணும்! அவராண்ட வந்து சேர்ரச்செ அவனுக்கு ஏழொ எட்டோ தான் பிராயம்!”
”கோவிலுக்குப்போனேளா?”
இன்னிக்குப்போகாம எப்பிடிங்காணும்! நாப்பத்திசொச்சம் வருஷத்துக்கு அப்புறம் அழகிய மணவாளர் திரும்ப வந்துட்டாரே! ஸ்தாபிதம் தரிசனம்பண்ணினீரா?”
ஆஹா! நம்ம வேதாந்த தேசிகரே மறு ஸ்தாபிதம் பண்ணற திருக்கோலத்தப்பாக்காமயா?
அழகிய மணவாளரோட போன அம்பது பேருல ரெண்டே பேருதாம் உசுரோட வந்தா! பிள்ளை லோகாச்சாரும் சுதர்சன பட்டரும் வைகுண்ட பதவி அடஞ்சுட்டாரே!
“இந்த ஸ்தாபிதத்தப்பாக்கறதுக்கு ஏதோ ஜென்மாந்தரப்புண்ணியம் பண்ணிருக்கோம் நாம!”
”ஆனாலும் கோவிந்தனுக்கு என்ன நெஞ்சுரம் பாத்தேளா! சாதிச்சுட்டாம்யா!”
”அதனாலதான் தேசிகர் கோவிந்தனாத்து நாமகரணத்துக்குப்பறம்தான் ஸ்வாமிக்கே மறு ஸ்தாபிதம்னுட்டாரே!!”
சரி !வாரும் போஜனம் ஆயிண்டு இருக்கு! நாமும் நாலு வா அள்ளிப்போட்டுண்டு வந்துடலாம்!
நாலு வாயா! கோவிந்தனையும் நப்பின்னையும் உம்ம விட மாட்டா ஓய்! இன்னிக்கு இந்த ஒரு போதே மூணு நாளைக்குத்தாங்கறாப்பில உபசரிப்பான் கோவிந்தன்!
”குழந்தைக்கு” என்ன பேரு வெச்சிருக்கான் கோவிந்தன்?
48 வருஷத்துக்கு முந்தின 1323 இல் அந்தச்சிவப்பு தினம்:
அக்கா அம்மங்கை கோவிந்தனின் எட்டு வயதுக்கைகளில் உயிரைவிட்ட ஒரு சிவப்பு தினம்.
சிவப்பென்றால் அதிகாலை சூரியன் எழும்போது தோன்றும் சிவப்பு இல்லை. கணவன் முதன் முதலில் காதலுடன் தொடும்போது இளம் பெண்ணின் கன்னங்களில் தோன்றுமே அந்தச்சிவப்பும் இல்லை. மர உருளையில் விளையாடும் உடையணியாக்குழந்தை தவறிக்கீழே விழுந்து பிருஷ்டத்தில் உண்டாகுமே அந்த கன்னிச்சிவப்பும் இல்லை. இது கறுஞ்சிவப்பு. முதலில் தோன்றும் பொட்டுச்சிவப்பு. பிறகு பீறிடும் வெள்ளச்சிவப்பு. தரையில் வழியும் திரவத்தில் ஏற்படும் குமிழிகளின் இடையில் தெறிக்கும் துளிகளின் சிவப்பு. எழுந்த சில நொடிகளிலேயெ கறுப்பாக மற்றும் ரசயானக்குருதிச்சிவப்பு.
பிற்காலத்தில் பயந்தும் கேலியுமாகப்பேசப்பட்ட சுல்தான் முஹம்மது பின் துக்ளக் என்னும் உலுக் கானின் அரக்க விளையாட்டில் ஸ்ரீரங்கம் பலியான தினத்தின் சிவப்பு.
அங்கும் இங்கும் பாய்ந்த குதிரைகள், தழும்பும் தாடியுமாய் மேலிருந்த மனித அசுரர்களின் பாஷை புரியாத கூச்சல். காற்றையே வெட்டிச்சாய்க்கும் வாட்களின் வீச்சு, ஆரோஹணித்திருந்த ஆசாமிகளின் உதைக்குப்பயந்து அரபுக்குதிரைகள் காலைத்தூக்கி உதறின வேகத்தில் அடிபட்ட பூஞ்சை வைஷ்ணவர்களின் தலைகள், கச்சம் அவிழ ஓடிய மத்யமர்களின் பயம், சிதறின குழந்தைகளின் ஓலம், அலறின பெண்களின் கண்ணீர்…….
திருவரங்கத்தின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கர தினம். மாலிக் காஃபூர் காலத்தில் இதை அனுபவித்த பெரியவர்கள் கண்ணீரால் கழுவின திருவரங்கம்.
“ரங்கா! இன்னும் எத்தனை முறை!”
வைரமும் வைடூரியமும் தங்கமும் மாலைகளும் நகைகளும் அள்ளிகொண்டு ஒடப்பட்ட தினங்களில் இழந்த உயிர்கள் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேலே!
அக்காவின் தலையை மடியில் வைத்துக்கொண்டான் கோவிந்தன். வாயிலிருந்து ரத்த நூல் ஒழுக, கழுத்து ஒரு பக்கம் சிதைக்கப்பட்டு, குதிரையின் குளம்படிகளால் மிதித்து சகதியான துடைகளோடு கத்தக்கூட திராணியில்லாது சத்தமின்றி ஒரு கையால் கோவிந்தனின் முகத்தைத்தடவியவாறே சாய்ந்த உயிர். பத்தடி தள்ளி மார்பெலும்பு சதையை மீறி வெளி வந்து உடைந்து இதயக்குழாய்கள் சின்னாபின்னமாக அறுபட்டு அத்திம்பேர் வேஷ்டி அவிழ்ந்து, பூணுல் அறுந்து வாய் பிளந்து, வானம் பார்த்த அகோர மரணம்.
“ நப்பின்னை! நப்பின்னை!”
”கோவிந்தா ! ஓடு ஒடு! அவா மறுபடி வரா! செத்துடுவே! ஓடு!”
அக்கா அத்திம்பேர் உடல்கள்! நப்பின்னை எங்கே!
கோவிந்தனின் உயிர் தானாகவே எழுந்து ஓடி கோவிலின் மூன்றாவது பிராகாரத்தின் தூணுக்கு இடையில் அந்தக்கல் பெயர்ந்த இடத்தின் அரையிருளின் பாதுகாப்பில், உடலெல்லாம் நடுங்க, மனம் நிரப்பிய சூனியத்துடன், விவரம் புரியாமல் ஒடுங்கியது!
“போய்ட்டாளா! நெஜம்மாவே போய்ட்டாளா?”
” எல்லாத்தையும்பிடுங்கி வாரிண்டு போய்ட்டா! ஆச்சாரியாரே! இனிமே நமக்கு என்ன கதி!”
“ எல்லா ரங்கனோட ஆக்ஞைப்படி! நாம என்ன செய்யமுடியும்! அனுபவிப்போம்!
எல்லாம் போச்சு! ஆம்டயா புள்ள எல்லாம் செத்துப்போய்ட்டா! நா மட்டும் இருந்து என்ன நானும் சாகரேன்!
”கூடாது பட்டரே! தினமும் ரங்கனைத்தொட்டு பூஜை பண்ற நீரே இப்படி மனம் உடஞ்சு போலாமா?”
”தேசிகர்வாள்! சொல்லுங்கோ நமக்கு ஏன் இந்த விதி விதிச்சிருக்கு?”
பதிலே இல்லாத கேள்வி !
”சரி! சட்டுன்னு போய் தாய் தோப்பனார இழந்த கொழந்தைகளைத்தேடுங்கோ! அவாள முதல்ல கூட்டணும்! ரட்சிக்கணும்! பயந்து போயிருக்குங்கள்!! போங்கோ போங்கோ!”
”மாமா! மாமா! அக்கா அத்திம்பேர் ரத்த ரத்தமா செத்துபோய்ட்டா! நப்பின்னயக்காணும்! எனக்கு பயமா இருக்கு!”
”ரங்கா! என்ன சோதனை!”
தேசிகர் கோவிந்தனைக்கூப்பிட்டு அணைத்துக்கொண்டார்.
”நா இருக்கேன் கொழந்த ஒனக்கு!”
எல்லாம் துறந்த தேசிகர் கண்ணில் நீர். ஏன் இந்த கோரம்!
அழைத்து வரப்பட்ட அனாதைக்குழந்தைகளின் நடுவில் விரல் சூப்பிக்கொண்டு நப்பின்னை!
அம்மங்கை பூ சாத்தாம ஒரு நாள்கூட அழகிய மணவாளர் பூஜைக்கு தயாரானதில்லை.
“கோவிந்தா! நா சொன்னா கேப்பியா?”
”சொல்லுங்கோ மாமா!”
”இனிமே நீதான் தினோம் இந்த இடத்துல பூ கொண்டு வெக்கணும்”
”மாமா !இங்க சாமியக்காணுமே! பெருமாள் இருப்பரே நா பாத்திருக்கேனே அக்காவோட பூ வெக்க வரும்போது?”
கூட்டத்தில் விசும்பலும் அழுகையுமடக்க முடியவில்லை.
”என்ன ஆச்சோ? பிள்ளை லோகாச்சார்யர் கிளம்பிப்போய்ட்டார்! வழில இந்த மிலேச்சன்கள் அவாள ஒண்ணும் பண்ணாம இருக்கணும்!”
”ஒண்ணும் ஆகாது! ராமனைப்போல அழகிய மணவாளருக்கும் இது வன வாசம்! எத்தனை நாளோ! ஆனா சுந்தரராஜப்பெருமாள் வருவார்! மறுபடியும் வருவார்! நானே மறுஸ்தாபிதம் பண்ணுவேன்!”
“நா சொல்றத நீங்கள்லாம் கேப்பேள்னு நம்பறேன். கிட்டத்தட்ட நூறுக்கு மேல குழந்தைகள் தாய்தோப்பனாரை இழந்துட்டு நிக்கறதுகள். அவாளுக்கு அந்தக்குறையே தெரியப்படாது. எல்லாரும் நம்ம குழந்தைகள்தான். முடிஞ்சவரை அவா ஒண்ணு ரெண்டு குழந்தைகளை தத்து எடுத்துக்கறாப்பல ஆத்துக்கு கூட்டிண்டு போய் சம்ரக்ஷியுங்கோ! எல்லாம் ரங்கனோட பிறப்புக்கள்தாம்!”
”மாமா! நானும் நப்பின்னையும் யாராத்துக்கு மாமா போணும்?”
”நீங்க ரெண்டு பேரும் என்னோடவே இருங்கோ, என்ன?”
”ஆஹா! தேசிகர் வாக்கு!”
கூட்டம் மிச்சமீதியிருந்த வீடுகளுக்குத்திரும்பியது. திரும்பினது மூட்டை முடிச்சுடன் புறப்பட்டது. ஸ்ரீரங்கம் காலியானது. மூலவர் அரங்கன் எழுப்பட்ட சுவற்றின் பின்னால் எப்போதும் போல அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க அவரின் புன்னகை மாறாமல் இருந்தது.
அடிபட்ட ஸ்ரீரங்கத்தில் ஞாயிறு எழுவதும் சாய்வதும் ஒன்றுமே நிகழாதது போல நடக்க வாழ்க்கையின் போக்கே மாறியது. தேசிகர் கோவிலோடு ஒடுங்கினார். மூட்டைமுடிச்சுக்கள் சொந்தக்காரர்களோடு சுற்றிலும் நகர்ந்தன.
”இந்தப்பூமியிலதான் என் உசிர விடுவேன்”
அரங்கனின் அதீத பக்தர் கூட்டம் மட்டும் சன்னக்குரலில், இல்லாத சுவாமிக்கு பூஜை புனஸ்காரங்களை நடத்தின.
”அவன விட்டுட்டுப்போயிருக்கானே! அவனும் நம்மை மறுபடி தாக்குவானோ?”
”இல்ல இல்ல! இவன் நம்மள கண்காணிக்கத்தான். சண்டையெல்லாம் இழுக்க மாட்டான்.”
”ஏன் கோவில்லேர்ந்து வெளில போய்ட்டான்?”
பயம்!
யாருக்கு அவனுக்கா? என்ன உளர்ரீர் ஸ்வாமின்! அவன் உலுக் கானோட ரெண்டாம் தளபதி!”
”உளரல! பேசினதக்கேட்டேன்! நாமள்ளாம் மந்திரதந்திரம் தெரிஞ்சவான்னு அவனுக்கு யூகம். அதனால ஏதானும் பண்ணிப்பிடுவோம்னு பயப்படறான்!”
”கத்தி ஈட்டின்னா எதித்து சண்டை போட்டுடலாம். சூனியத்துக்கெல்லாம் என்ன பண்றதுன்னு பேசிண்டா!”
”அதான் வெளில போய்ட்டானா?”
”ஆமா ஆனா அங்கேர்ந்து பார்வய இங்கயே வெச்சுண்டிருப்பன்! ஏதானும்னா உடனே சுல்தானுக்கு சேதி போய்டும்!”
”தேசிகர் ஸ்வாமி இன்னிக்கு எல்லாரையும் கூட்டுருக்கார்”
”என்னவாம்! அழகிய மணவாளர் பத்தி ஏதானும் சேதியா?”
”சும்மாருங்காணூம்! உற்சவரப்பத்தி வாயே திறக்க வாண்டாம்னு சொல்லியிருக்கோல்லியோ?”
கோவிந்தனுயும் நப்பின்னையும் கோவிலில் தேசிகரின் கண்காணிப்பில் வளர்ந்தார்கள்.
வருடம் தைப்பன்னிரெண்டு1333:
வரதா! கோவிந்தனுக்கு பிராயம் பதினாறாய்டுத்தே! நப்பின்னைக்கும் அவனுக்கும் பாணிக்ரஹணம் பண்ணிடலாமா?
ஆஹா பேஷான்னா! அவனும்தான் அக்கா குழந்தய இப்பவே என்னமாப்பாத்துக்கறான்!
கோவிந்தா! நப்பின்னை! தீர்க்காயுஷ்மான் பவ! நன்னாருங்கோ! வம்சம் நன்னா வளரணும்!
கோவிந்தன் பூஜைக்குப்பூ கொடுத்து வர, நப்பின்னை அவனை கோவிந்தா வாடா போடாவென்றே அழைத்து வீட்டைக்கவனித்தாள்.
வருடம் கார்த்திகை இருபது,1336:
ஆச்சார்யாளுக்கு ஒரு நல்ல விக்ஞாபனம்!
என்ன?
கோவிந்தனுக்கும் நப்பின்னைக்கும் பெண் குழந்தை!
ஆஹா! ரங்கா! ஆயுசோட நன்னா இருக்கட்டும்!
கோவிந்தா! என்ன பேரு வெக்கப்போற?
கோவிந்தன் சோன்ன பதிலைக்கேட்ட வேதந்த தேசிகர் “ உன் விருப்பம் கோவிந்தா!” என்று புன்னகை புரிந்தார்.
மறுபடி வைகாசிப்பதினேழு, பரிதாபி வருஷம் – 13, மே, 1371:
கோவிலின் வாத்தியக்காரர்கள் இசையை ரசித்து அனுபவித்து வாசிக்க, வேத மந்திரங்கள் முழங்க அழகிய மணவாளர் கோவிலுக்கு வந்துவிட்டார். நூத்தியோரு பிராயம் கடந்த வேதந்த தேசிகர் மறுஸ்தாபிதத்துக்கு வேண்டிய எல்லா ஆகம விதிகளையும் பின்பற்றி சடங்குகள் செய்யச்சொல்லிவிட்டு கிளம்பினார்.
” விஜயநகர மன்னர் புக்க ராயருக்கு ஸ்ரீரங்கம் ஏழேழு ஜென்மத்துக்கும் நன்றி சொல்லணும் ஸ்வாமின்!”
“இல்லியா பின்னே! அவா தலையிட்டதாலத்தானெ இந்த மிலேச்சன்களை விரட்டி அடிக்க முடிஞ்சது!”
”சரி, எங்க தேசிகாச்சாரியார் கிளம்பிட்டார்?
கோவிந்தன் க்ருஹத்துக்கு!
அங்க என்னவாம்?
”என்னவா? ஓய்! இன்னிக்கு “குழந்தைக்கு” நாம கரணம் ஸ்வாமின்!”
”என்னது “குழந்தைக்கு” நாம கரணமா?”
”சிரிக்காதீயும் ஓய்! என்ன ஒரு வைராக்கியம் இருந்தா கோவிந்தன் இப்படிப்பண்ணியிருப்பான்! அதான் தேசிகரே போய் நடத்திக்கொடுத்துட்டு அப்புறமாத்தான் சுந்தர்ராஜப்பெருமாள் ஸ்தாபிதம்!”
இங்கே கோவிந்தனின் க்ருஹத்தில் நப்பின்னையோடு மணையில் அக்னி முன் அமர்ந்திருக்க “குழந்தையும்” அருகில் இருந்தாள். வைதீகர்கள் எல்லா சம்ஸ்காரங்களையும் செய்வித்து முடித்தனர். தேசிகர் உள்ளே வந்ததும் பரபரப்பு.
”கோவிந்தா! ம் சொல்லு!”
” த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. ………இப்போ சௌபாக்யன்னு பேரச்சொல்லு….”
கோவிந்தனினுக்கு வாயில் ரத்த நூலுடன் தன் கைகளில் மரித்த அக்கா அம்மங்கையின் சின்ன முகம் தெரிய, கண்ணில் நீர் வழிய வாய் குழற மந்திரம் சொன்னான்
த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. சொல்லி நெய் கலந்த தேனை ”குழந்தை”யின் நாக்கில் தடவினான்.
ஹரிஹி ஓம்! ஹரிஹி ஓம்! – வேதவிற்பன்னர்கள் ஏதோ தங்களின் குழந்தைக்கே நாமகரணம் செய்விப்பது போல குதூகலத்துடன் வாழ்த்தினர்.
வேதாந்த தேசிகர் கைகளில் பூவை எடுத்து “குழந்தையின்” பேரில் சொரிய, சற்றே தூரத்தில் ”குழந்தையின்” கணவனும் கோவிந்தனின் மாப்பிள்ளையுமான ரங்கனும், அவளின் பெண் கோமளியும் சிரித்தவாறே பார்த்துக்கொண்டிருக்க, கடந்த முப்பத்தைந்து வயது வரை பெயரிடப்படாமல் “குழந்தை” என்றே விளிக்கப்பட்ட கோவிந்தனின் பெண் கூச்சத்துடனும் அம்மங்கை என்னும் தன் அத்தையின் பெயர் தாங்கின நாள் கூட அவள் வெட்கத்துடன் சிவந்த ஒரு தினம்தான்!
No comments:
Post a Comment