Thursday, 26 April 2018

கதையரங்கம் இந்த வாரம் (27 ஏப்ரல் 2018) ஒரு நாள் முன்னதாகவே.......

ஏறக்குறைய நியாயம்

பெரியவர் கையை சோப்பால் கழுவிக்கொண்டார். மறுபடியும் படுக்கைக்கு அருகில் வந்து சற்று முன் ஆபரேட் பண்ணின ஆசாமியின் மானிட்டரை உற்றுக்கவனித்தார்.

“அவினாஷ்! கீப் ய வாட்ச்! ஹார்ட் பீட்டை க்ளோசா கவனி! நோ செஸ்ட் வூண்ட் இன்ஃபெக்ஷன்! மைண்ட் யூ, ஹி ஈஸ் ய சிஏபிஜி கேஸ்!”

“எஸ் டாக்டர்!”

டாக் டாக்கென்று நடந்து காரிடார் வந்தார். ஒரு நிமிஷம் லிஃப்ட் முன்னால் தயங்கி நின்றுவிட்டு மீண்டு எதிர்த்திசையில் நடந்தார்.

“ப்யூலா! லெட்ஸ் வாக் டௌன்!”

தன் பாரியான உடலைத்தூக்கிகொண்டு ப்யூலா பின்னாடியே ஓடினாள்.

“ப்ரீ நேடல் கேர்ல சுமதி வந்தாச்சா?”

“வந்துட்டாங்க புரொஃபஸர்!”

“அவங்க அம்மாவுக்கு எப்படி இருக்காம்?”

“தெரியல டாக்டர்!”

“ஆஸ்க் ஹர் ப்யூலா! அடுத்த வாரம் என்னை வந்து பாக்கச்சொல்லு!”

”ஓகே டாக்டர்”

”ப்ளட் பாங்க் ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் வந்தாச்சா?”

“இன்னும் இல்ல!”

“கால் லக்ஷ்மண்! என்ன வெட்டி முறிக்கற வேலை இதைவிட அவனுக்கு!”

”ஓகே டாக்டர்!”

“ ந்யூரோசயன்ஸ்ல பிராஜக்ட் ரிப்பொர்ட் ரெடியாமா?”

“இன்னிக்கு ஈவினிங் உங்க கிட்ட அப்பாயிண்ட் மெண்ட் இருக்குன்னு நிர்மலா காலையில சொன்னாங்க டாக்டர்!

“யெஸ்! லெட் ஹர் கம் அட் ஃபோர் ஓ க்ளாக் டுடே!”

முதல் மாடி மெஸ்ஸனைனில் எமர்ஜென்ஸி வார்டில் கூட்டம் அம்மியது. மாடிப்படிக்கு அருகே இரண்டு மூன்று போலீஸ்காரர்கள்.

“என்ன இங்க? ஏது போலீஸ்?”

“இதோ கேக்கறேன் சார்!”

இரண்டே நிமிடங்களில் ப்யூலா வந்து மூச்சிரைக்க நின்றாள்.

“கிராப் குமார அட்மிட் பண்ணியிருக்காங்க டாக்டர்!”

“என்ன பேரு இது? கிராப் குமாரா? யார் அவன்?”

டாக்டர்! போன மாசம் அந்த எட்டு வயசுப்பொண்ண ரேப் பண்ணி கொலை பண்ணினதா பிடிச்சாங்களே அவந்தான்!”

“ஓ தட் புரூட்! என்ன ஆச்சாம் அவனுக்கு? வெயிட், நானே வரேன்!”

“இன்ஸ்பெக்டர்! இதோ டீனே வ்ர்ராரு!”

“சார்! நான் இன்ஸ்பெக்டர் கதிரவன்! கிராப் குமார அட்மிட் பண்ணியிருக்கோம். நானே உங்கள வந்து பாக்கணூமின்னு இருந்தேன். ஐ ஜி உங்க கிட்ட சொல்லச்சொன்னாரு!

“என்ன ஆச்சு இன்ஸ்பெக்டர்? கஸ்டடியில் அடிச்சீங்களா?”

“மிருகம் சார் இவன்! எட்டு வயசுப்பொண்ண..ச்ச்ச்ச்! நீங்க பாத்திருக்கணூம் அந்தக்குழந்தைய சாக்குப்பைக்குள்ளார போட்டு……”

“அடிச்சீங்களா?

“பின்னிட்டோம் சார்! எனக்குத்தெரிஞ்சு முதுகெலும்ப பேத்துட்டோம்னு நெனைக்கிறேன்!”

“அப்புறம் இங்க கொண்டு வந்து போட்டு நான் ட்ரீட்மெண்ட் குடுக்கணூமா? உங்களுக்கு யாரு இதுக்கெல்லாம் பர்மிஷன் தர்ராங்க!”

”ஐ ஜியே முடிஞ்சா தீத்துருங்க இவனன்னு சொல்லிட்டாருங்க! அந்த அளவுக்கு சேதம் பண்ணியிருக்கான் அந்த பாப்பாவ!”

” அதுக்கெல்லாம் நமக்கு உரிமை கிடையாது இன்ஸ்பெக்டர்! ப்யூலா! அட்மிட் ஹிம் இன் எமர்ஜென்ஸி ஐ சி யூ! கால் நரசிம்மன்! யாரு இன்னிக்கு ஆர்த்தொல ட்யூட்டி?

“பட்டாபிராமன் டாக்டர்!”

“குட்! உடனே வரச்சொல்லு! ந்யூரோலேர்ந்து நிர்மலாவையும் கூப்பிடு! ஐ வாண்ட் ப்ரோக்நோஸிஸ் இன் ஆல் டைரக்ஷன்ஸ்!”

டாக்டர்கள் கூட்டம் கூடுதல், எல்லா டெஸ்டுக்கான சாமக்கிரியைகள் வந்து சேர அவற்றை பொருத்தி ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்டும் ஒரு டெஸ்டைச்செய்ய கிராப் குமார் வலி தாங்காமல் முனகினான்.

“மை காட்! என்ன அடி அடிச்சிருக்காங்க! இன்ஹ்யூமன்! பிரைமரி ட்ரௌமா தாண்டி பையோகெமிக்கல் காஸ்கேடுனால டிஷ்யூ டாமேஜ் ஆகியிருக்கே!”

அடுத்த ஒரு வாரம் பெரியவரே நேரில் மேற்பார்வை பார்த்தார். ஒவ்வொரு டாக்டரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்.

“நிர்மலா! பார்த்தியா? டெர்மடோமை விட மையோடோம் டாமேஜ் அதிகம்!”

“ஆமாம் புரொஃபசர்! அவன செடேஷன்லேர்ந்து இன்னமும் எடுக்க முடியல! வலி தாங்காம கதறரான்!”

நோ நோ! கீப் ஹிம் செடேட்டெட்! பாவம் வலி கொன்னுடும்!”

“பட்டாபி! போன் கண்டிஷன் எப்படி இருக்கு?”

“டிபியா ஃபிபுலா ஃப்ராக்சர் டாக்டர்!”

”கண்டிஷன்?

”கொயட் சிவியர்!”

”ஃபெமூரே அடி வாங்கியிருக்கு! செமத்தியா அடிச்சிருக்காங்க!”

இரண்டு வாரங்களுக்குப்பிறகுதான் கிராப் குமார் சுய நினைவுக்கு வந்தான்.

“டாக்டர்! கேஸ் ரொம்ப ஹை புரொஃபைலாயிடுத்து! பேப்பர்லயும் டீவிலயும் கிழி கிழின்னு கிழிக்கறாங்க! அடுத்த வாரமே ஹைகோர்ட்டுல வந்துடும்! இவன டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா?’

“அவனுக்கு நல்ல ரோபஸ்ட் ஹெல்த்! உங்க அடியையும் மீறி பொழச்சிட்டான்!”

“அவன அப்படியே கொன்னிருக்கணூம் டாக்டர்! இவனுக்கெல்லாம் பாவமே பாக்கக்கூடாது!

”நோ இஸ்பெக்டர்! சட்டம்னு ஒண்ணு எதுக்கு இருக்கு? நாமளே கையில் எடுத்தா அனார்க்கிதான்! எனி வே, அடுத்த வியாழந்தானே கேஸ்? புதன் சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்!”

ஓகே டாக்டர்!

புதன் கிழமை மாலை டிஸ்சார்ஜ் ஆகும்போது கிராப் குமாரைப்பார்க்க பெரிய டாக்டர் வரவில்லை. ப்யூலா வந்து சொன்னாள்

“டிஸ்சார்ஜ் ஆகிப்போய்ட்டான் புரொஃபசர்! இன்னம் நிமிர முடியல! கூனி மாதிரிதான் நடத்தி கூட்டுட்டு போறாங்க! ”

“ஓகே! மருதநாயகம் கேஸ் என்ன ஆச்சு? யூரோடைனமிக்ஸ் ரிஸல்ட் வந்தாச்சா?”

“இதோ பாக்கறேன் புரொஃபஸர்! இன்ஸ்பெக்டர் கதிரவன் வந்திருக்காரு! ஒரு நிமிஷம் உங்களப்பாக்கணுமாம்!”

“யெஸ் இன்ஸ்பெக்டர்?”

”கிராப் குமார டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம் சார்! ஐ ஜி உங்களுக்கு தாங்க்ஸ் சொன்னாரு! நான் தான் சொல்லப்போறதில்ல! இவனுக்கெல்லாம் நல்ல சாவு வரக்கூடாது டாக்டர்!”

”அத நீங்களும் நானும் முடிவு பண்ணக்கூடாது இன்ஸ்பெக்டர்! சட்டம் தான் முடிவு பண்ணனும்!”

“என்ன சட்டம் டாக்டர்! எத்தன ஓட்டை இருக்கு அதுல! நாளைக்கி கேஸ்! தண்டனை கிடைக்குமோ இல்ல இவனும் மத்தவங்க மாதிரி சாமர்த்திய வக்கீலோட பேச்சால சாட்சியம் போறலைன்னு வெளியே வந்துடுவானோ! இந்த ஹ்யூமன் ரைட்டுன்னு ஒரு கயவாளிக்கூட்டம் வருவாங்க! தொல்லை டாக்டர்! நீங்க ட்ரீட் பண்ணாம அவன இங்கியே முடிச்சிருக்கணூம்!”

”ஓ நோ இன்ஸ்பெக்டர்!”

”சாரி டாக்டர்! அவ்வளவு கோவமா வருது! நீங்க அந்தக்குழந்தையோட பாடியப்பார்த்திருக்கணும்! எட்டு வயசு! அதப்போய்…? எப்படி மனசு வரும்! பாஸ்டர்ட்! சாரி டாக்டர்!”

“ஓகே! உங்க வெறுப்பு புரியறது! ஆனா நான் டாக்டர்! என் வேல உயிரைக்காப்பாத்தறதுதான்! மீதியெல்லாம் அந்த ஸ்ரீரங்கத்துக்காரன் பார்த்துப்பான்!”

“என்ன கடவுளோ டாக்டர்! இருந்திருந்தா அந்தக்குழந்தைக்கு இப்படி ஒரு கதி வந்திருக்குமா?”

“சரி, இன்ஸ்பெக்டர்! வில் யூ நௌ லிஸன் டு மீ கேர்ஃபுல்லி!”

“எஸ் டாக்டர்?”

“ நாளைக்கு வரப்போற கிராப் குமார் கேஸுல நீங்கதானே ட்யூடி ஆஃபிஸர்?”

“எஸ் டாக்டர்!”

“இந்தக்கேஸுல அவனுக்கு தூக்கு தண்டனைக்கு கம்மியா கெடைக்கக்கூடாது! ஒரு ஓட்டை கூட விடாம கேஸ நடத்தி முடிக்கணும் நீங்க! டோண்ட் லீவ் எனி லூப் ஹோல்! ஐ ஜிகிட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க! கெட் தெ காபிடல் பனிஷ்மெண்ட் ஃபார் திஸ் ப்ரூட்!”

டாக்டர் வைகுண்டத்தின் குரலில் இருந்த ரௌத்திரமும் வார்த்தைகளின் தடித்த ஒலியும் அவர் பல் கடித்த முறுக்கும் இன்ஸ்பெக்டர் கதிரவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ”காபிடல் பனிஷ்மெண்ட்” என்று உச்சரித்த வார்த்தையும் அவர் ஃபோனை வைத்த சத்தமும் வெடி போலக்கேட்டது.

Thursday, 19 April 2018

இந்த வாரக்கதையரங்கத்தில் (20 ஏப்ரல், 2018)...

சந்திரிகா என்னும் கிருஷ்ணம்மாள்
---------------------------------------------------------

தீபாவளி லீவுக்கு அடுத்த நாள் எல்லோரும் கலர் டிரெஸ்சில் வந்திருந்தபோதுதான் அந்தப்பரபரப்பு ஏற்பட்டது.

"மனோகர் கிருஷ்ணம்மாளுக்கு லவ் லெட்டர் கொடுத்துவிட்டான்".

அதிர்ச்சியைவிட எங்களுக்கு சிரிப்பும் ஆச்சரியமுமே உண்டானது.

மனோகரா, அதுவும் கிருஷ்ணம்மாளுக்கா?

எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் எஸ் எஸ் எல் சி வகுப்புகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் அப்பாக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றாலும், நான் ஒரு கோடி காட்டிவிடுகிறேன்.

எங்களுடையது கோ எஜுகேஷன். ஆங்கில மீடியத்தில் நாங்கள் மொத்தம் முப்பது பேர்தான், அதிலும் பெண்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. காந்தி நகரில் மூலையில் இரண்டு அழுக்கு குட்டைகளின் மத்தியில் கூரை வேய்ந்த அரைச்சுவர் கட்டிடங்களைக்கொண்ட பள்ளிக்கூடம். பத்தாவதில்தான் டேபிள் சேர், அதற்கு முன்பெல்லாம் குமாஸ்தா பெஞ்சுதான். கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுமே தமிழில்தான் பாடம் எடுப்பார்கள். ஹெட்மாஸ்டர் எஸ்வி டி சார் எப்பவாவது கிளாஸ் எடுத்தால் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் பேசிக்கொல்லுவார்!

சரி, இப்போது லவ் லெட்டர் பற்றி.

மனோகர் ஒரு வேடிக்கையான சாதாரணன். பார்க்க ரொம்ப சின்னவனாக இருப்பான். அவன் முகம் சற்றே சூம்பினாற்போல் இருக்கும். ஆனாலும் ஒரு துரு துரு களை உண்டு. எஸ் எஸ் எல் சியிலும் கூட அரை டிராயர்தான் போட்டுக்கொண்டு வருவான். அப்படி ஒன்றும் படிப்பில் சூடிகை இல்லை என்றாலும், நிறைய ஞாபக சக்தி உண்டு. கிரிக்கெட் வெறியன். அதிலும் ஸ்கோர் விவரம், யார் எவ்வளவு ரன், விக்கெட் மட்டுமில்லாது, ஓவர் ரேட், மெய்டென் ஓவர், போன்ற சில்லறை விவரங்களும் அவனுக்கு அத்துப்படி.

"நைன்டீன் சிக்ஸ்டியில் மெல்பேர்னில் பிரசன்னா ஆறு விக்கெட் எடுத்தார், வித் ஒன்லி 28 ரன்ஸ்" என்பான்.

அவனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடைய நடக்கும் ஸ்கோர் விவரம் பற்றிய விவாதங்கள் ரொம்பவுமே வேடிக்கையானவை. வெங்கடராகவன் ஆறு ஓவர்தான் போட்டார், இல்லை, ஏழு ஓவர் என்று அரை மணி நேரம் சண்டை போடுவார்கள். பிறகு லைப்ரரிக்கு ஓடி அந்த நாள் பேப்பரைப்பார்த்த பிறகே விவாதம் முடிவுக்கு வரும்!

மனோகருடைய உலகம் ரொம்ப சின்னது, அதில் பெண்கள், லவ் போன்றவைக்கு இடம் இல்லை என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.

கொஞ்சம் கிருஷ்ணம்மாள் பற்றியும் சொல்லலாம்.

அது என்ன சந்திரிகா என்றால், அந்தப்பெண்ணுக்கு கிருஷ்ணம்மாள் என்றுதான் ஸ்கூல் ரிகார்டில் பெயர். பாவம், ஏதோ ஆந்திராவில் ஒரு மூலையில் இருந்த கிராமத்தில் உள்ள அதன் பாட்டி பெயரை வைத்துவிட்டார்கள் போல. அது ஆறாவதிலேயே எங்கள் ஸ்கூலுக்கு வந்து விட்டது. வந்த அன்னிக்கே, வத்சலா டீச்சர் அவள் பெயரைச்சொன்னவுடன் சிரித்துவிட, அதற்கு கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது. உடனே, " எனக்கு வீட்டில் சந்திரிகா என்று பெயர்" என்று அவசரமாக சொன்னது. ஆனாலும் நாங்கள் "கிருஷ்ணம்மாள்" என்றுதான் எங்களுக்குள் விளித்துக்கொள்வோம்.

அப்போதெல்லாம் நேருக்கு நேர் பெண்களுடன் பேச்சு வார்த்தை கிடையாது. ஓரக்கண் பார்வைதான், அதுவும், ஒன்றிரண்டு பேர் மட்டும்தான்.

இந்த கிருஷ்ணம்மாள் இருக்கிறதே, அதுவே கிட்டத்தட்ட மனோகர் போலதான், ரொம்ப சின்ன சைஸ் ஏரியல் யூனிகோட் ஃபாண்ட் மாதிரி இருக்கும். உயரம் என்ன, மிஞ்சினால் நாலரை அடிக்கு மேல் தாண்டாது. மரப்பாச்சி போல கொஞ்சம் மாநிறமாக இருக்கும். எஸ் எஸ் எல் சியிலும் பாவாடை சட்டைதான், தாவணி போடும் அளவுக்குக்கூட பெரியவளாக இருக்காது. ஹீரோயினுக்கு பர்மனண்ட் தோழி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! எப்போதும் ராஜியுடனே இருக்கும்.

மேற்குறிப்பிட்ட இந்த ராஜி நல்ல வளர்த்தியாக உயரமாக இருப்பாள். ”ஜிங் ஜிங்”குவேன்று ஒரு ராயசமாக நடந்து வருவாள். தமிழ் மீடியம் பையன்கள் கொஞ்சம் துரத்துவார்கள்.

துரத்துவது என்றால் இப்போது போலெல்லாம் இல்லை. இந்திரா நகரிலிருந்து அது வரும் பஸ்சுக்காக காத்திருந்து, ஒரு பத்தடி இடைவெளி விட்டு நடந்து வருவது, ஸ்கூல் பிரேயரில் அவள் பாடி முடித்தவுடன் கை தட்டுவது போன்ற சாகசமற்ற செய்கைகள்தான். அதற்கே அது ரொம்ப பிகு பண்ணிக்கொள்ளும். ஒரு பின்னலை முன்னாலும் ஒன்றை பின்னாலும் போட்டுக்கொண்டு சரோஜா தேவி நடை நடக்கும். ஜாகரஃபி கிளாசில் நிச்சயமாக தூங்கும். இரண்டு முறை எச்சில் வழிய எழுப்பிவிடப்பட்டு " போ! மூஞ்சி கழுவிக்கொண்டு வா" என்று டிகே சார் விரட்டியிருக்கிறார்.

கிருஷ்ணம்மாள் கொஞ்சம் துடுக்கு அதிகம். சுமாரான பெண்களுக்கே உரிய தைரியம், கொஞ்சம் அலட்சியம் என்று எகிறும். ராஜியை ஏதாவது கேட்டால், இது முந்திக்கொண்டு பதில் சொல்லும். ஒரு முறை சுந்தர் ராஜியைப்பார்த்து. "உங்க வீட்டில் அரிசி எங்க வாங்கறாங்க" என்று கேட்டதற்கு, இந்த கிருஷ்ணம்மாள் பழி சண்டை போட்டு அவனை சாரி கேட்க வைத்துவிட்டது!

முதலில் சொன்ன தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூலில் எப்போதும்போல ஈயம்தான் இந்த விஷயத்தை உடைத்தான். பெல் அடித்து பிரேயர் முடிந்தவுடன், அரட்டை அடித்துக்கொண்டே கிளாசுக்கு திரும்பும்போது, எங்களில் சில பேரை இழுத்து ரகசியமாக காதைக்கடித்தான்.

“டேய்! நம்ம மனோகர் கிருஷ்ணம்மாளுக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டான்! அவ ஹெட்மாஸ்டர்ட்ட கம்ப்ளைன் பண்ணிட்டா, கண்ணாயிரம் இப்போதான் சொல்லிட்டு போறாண்டா!".

எங்களால் நம்ப முடியவில்லை. கிளாசில் மனோகர் வழக்கம் போல கிருஷ்ணமூர்த்தியிடம் ஏதோ வாதம் பண்ணிக்கொண்டு இருந்தான்.

"நட்கர்னி 50 மெய்டன் ஓவர் போட்டது நம்ம மெட்ராசில், நேரு ஸ்டேடியத்தில்தான், என்ன பெட்டு!" .

எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு கீழ்ப்பார்வை பார்த்துக்கொண்டே போய் உட்கார்ந்து விட்டோம். முதல் பீரியட் எடுக்கும் எதற்கோ "ஒக்காரை" என்று பெயர் கொண்ட ரங்கராவும் வந்து அட்டன்டன்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். கிருஷ்ணம்மாள் கடைசியில் தலை குனிந்து உடக்கர்ந்து கொண்டிருக்க, ராஜி அவளிடம் ஏதோ குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தாள்.

கண்ணாயிரம் வந்து "சார், மனோகரை ஹெட்மாஸ்டர் கூப்பிடறார்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டான். ரங்காராவ் சார் பாடம் ஆரம்பித்து விட்டாலும், எங்களுக்கு பரபரப்பாக இருந்தது. முக்கியமாக எனக்கு, ஏனென்றால், நான் கிளாஸ் லீடர். பத்தே நிமிடங்களில் எனக்கும் அழைப்பு வந்து விட்டது.

ஹெட்மாஸ்டர் ரூமில் மனோகர் அழுதுகொண்டிருந்தான். எஸ் வி டி சார் கொதித்துக்கொண்டிருந்தார்,

"உங்க கிளாசில்தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இவனுக்கு இருக்கிற பர்சனாலிடிக்கு லவ் லெட்டர் கேட்கிறதா!"

“சத்தியமா நா எழுதலை சார்” என்று மனோகர் விசும்பினான். எஸ் வி டி கையில் அந்த சரித்திரப்ரசித்தி பெற்ற லவ் லெட்டர். என்னிடம் நீட்டி இன்னும் கொஞ்சம் உயர டெசிபலில் சொன்னார்.
"இந்தா, நீதானே லீடர்? உனக்கும் தெரியணும், உங்கள் கிளாஸ் பசங்களின் லீலைகள்!. பெரிய பெருமை வேற இதுல, இங்க்லீஷ் மீடியம்னு, போக்கத்த பசங்க!"

அந்த லெட்டரை வாங்கிப்படித்தேன்.

"அன்புள்ள சந்திரி, உன் மேல் எனக்கு எப்போதுமே ஒரு இது உண்டு. உனக்கும் என்மேல உண்டா? அன்னிக்கு நீ ராஜியுடன் வரும்போது என்னையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்கும் புரிந்தது. இந்தியா டீம் பாம்பே டெஸ்டில ஜெயிச்சபோது இருந்த சந்தோஷத்தைவிட அதிகமா இருந்தது. பதில் போடறியா?"

இவ்வளவுதான்.

எனக்கு குழப்பமாக இருந்தது. மனோகரா? இத்தனை வருடங்களில், அவனுக்கு கிருஷ்ணம்மாள் மேல் ஏதும் இருப்பதற்கான அடையாளமே தென்பட்டதில்லையே?

நான் எஸ் வி டியிடம். “சார், நா வேணா மனோகரிடம் கொஞ்சம் பேசிப்பார்க்கிறேனே ?”

"என்ன வேணா பண்ணு. ஆனா அவனை இனிமே இந்த ஸ்கூலில் வெச்சுக்கறது கஷ்டம்!"

இதைக்கேட்டு மனோகர் ஒ வென அழ ஆரமித்தான்

"சார், ப்ளீஸ் கொஞ்சம் தயவு பண்ணுங்க, பாவம் சார், மனோகர்!"

"பண்ணறதையும் பண்ணிட்டு என்ன பாவம். இந்த மாதிரி விஷயத்தைஎல்லாம் முளையிலேயே கிள்ளணும்!"

"சார், ப்ளீஸ், நான் பேசிப்பார்க்கிறேன். அவனை சாரி லெட்டர் கொடுக்கசொல்றேன், டிஸ்மிசெல்லாம் வாணாம் சார்!"

“சரி, போ, அவனோட பேசு. அப்பறம் இங்க வா!"

விசும்பிக்கொண்டிருந்த மனோகரை அழைத்துக்கொண்டு தனியே வந்து ஸ்டாப் ரூமுக்குள் உட்கார்ந்தோம்.

கிளாசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ராதா டீச்சர் , "என்ன மனோகர், இப்படி பண்ணிட்டே?" என்றவுடன், "ஐயோ, நா இல்லை டீச்சர்" என்று மறுபடி அலறினான்.

அடுத்த இருபது நிமிஷமும் அவனோடு பேசினதில், நா சத்தியமா எழுதலைடா" என்றுதான் மனோகர் சொன்னான். அவன் பொய் சொல்லுவது போல் இல்லை.

ஆனால் எப்படி நிரூபிப்பது?

“சரி, இன்னிக்கு நீ வீட்டுக்கு போடா! அமைதியா இரு. வீட்ல ஒண்ணும் சொல்லாத. நா மறுபடி ஹெட்மாஸ்டர்கிட்ட பேசறேன். பயப்படாம போடா!"

அவனை அனுப்பிவைத்தேன். கிளாசுக்கு வந்தும் என்னால் பாடங்களைக்கவனிக்க முடியவில்லை.

லஞ்சின்போது, கிருஷ்ணம்மாளைப்பார்த்து, கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டதில், கண்ணைக்கசக்கிகொண்டு ராஜியுடன் வந்தது.

"இதப்பாரு, நெசமாத்தான் மனோகர் குடுத்தானா?"

"ஆமா!"

”எப்போ, எப்பிடி குடுத்தான்?"

“என்னோட டெஸ்ட் நோட்டுல வெச்சு குடுத்தான்!"

கிளாஸ் டெஸ்ட் திருத்தியபின், டீச்சர்கள், யாரையாவது ஸ்டாஃப் ரூமுக்கு அனுப்பி டெஸ்ட் நோட்டுக்களை கொண்டு வரச்சொல்லுவார்கள். மனோகரை கொண்டு வரச்சொன்னபோது அதில் வைத்திருக்கிறான் என்று கிருஷ்ணம்மாள் சந்தேகப்பட்டது.

மறுபடி ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போய் அந்த லெட்டரையும் மனோகரின் டெஸ்ட் நோட்டில் உள்ள கை எழுத்தையும் பார்த்ததில் குழப்பம் அதிகமாகத்தான் ஆயிற்று. கையெழுத்து ஒரேமாதிரி போலவும் இல்லாததுபோலவும் இருந்தது.

ஹெட்மாஸ்டரிடம் போய், " எனக்கு ஒண்ணும் புரியலை சார்" கையெழுத்து பார்த்தாலும் நிச்சயமா தெரியலை. ஆனா, மனோகர் நல்ல பையன் சார், இதுதான் முதல் தடவை, வார்னிங் குடுத்து விட்டுடலாம் சார்" என்று கெஞ்சினேன்.

"அதெல்லாம் முடியாது. அப்பறம் உன் க்ளாசிலேர்ந்து ஒத்தொத்தனாய் கிளம்புவீங்க!"

சக மாணவர்களிடம் பேசினேன். எல்லோரும் மனோகர் பண்ணி இருக்க மாட்டான் என்றுதான் நம்பினாலும் ஒண்ணும் பண்ண இயலாது என்பது தெரிந்துவிட்டது.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறி கிளப்பினான்.

“டேய்! நீ ராஜியோட கையெழுத்தை செக் பண்ணினியா?”

மத்தியான கிளாசில் ராமசாமி சார் என்னை அனுப்பி டெஸ்ட் நோட் எடுத்து வரச்சொன்னார். ஸ்டாப் ரூமில் இருந்த பிருந்தா மீனாக்ஷி, சுதந்திரா டீச்சர்கள் பேச்சில் மனோகர்தான். என்னைக்கண்டதும் நிறுத்தி வேறு ஏதோ பேசறமாதிரி பாவ்லா பண்ணினார்கள் .

டெஸ்ட் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு வரும்போது ராஜியின் டெஸ்ட் நோட்டில் கை எழுத்தை செக் பண்ணலாமென்று பார்த்தேன். அதற்குள்ளிருந்து ஒரு காகிதம் வெளியே விழ, எடுத்துப்பார்த்ததில் இன்னொரு லவ் லெட்டர், அதே வாசகங்களுடன், ஆனா வேறு ஒரு கையெழுத்தில்! சட்டென்று அவளுடைய டெஸ்ட் நோட்டைப்புரட்டினதில், அப்படியே ராஜியின் கை எழுத்து!

உடனே நான் ஹெட்மாஸ்டரிடம் போய் விஷயத்தை உடைத்தது, ராஜியும் கிருஷ்ணம்மாளும் முதலில் ஆங்காரமாக மறுத்து பின்னர், வேறு வழியில்லாமல் தானேதான் எழுதி அதை மனோகர் மேல் பழியாகப்போட்டதையும் ஒப்புக்கொண்டு விட்டதும் சம்பவங்கள்.

இதோடு கதை முடியவில்லை. நாங்கள் அன்று சாயங்காலமே மனோகர் வீட்டுக்குப்போய் அவனிடம் விஷயத்தைச்சொன்னோம். அவன் கிருஷ்ணமூர்த்தியைக்கட்டிக்கொண்டு புலம்பினான்.

“ரொம்ப தாங்க்ஸ் டா, உன்னாலதான் எனக்கு லைஃபே திரும்ப கிடைச்சது!"

ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ "எனக்கு அப்பவே தெரியும் அந்த லெட்டரை நீ எழுதலைன்னு" என்றது எங்களுகே ஆச்சரியம்தான்.

" எப்படிடா?"

"அந்த லவ் லெட்டர்ல பாம்பே டெஸ்ட்ல இந்தியா ஜெயித்ததுபோலன்னு எழுதியிருந்துதே!”

”ஆமா அதுல என்னடா இருக்கு?”

”அடச்சீ! கேளு! அந்த டெஸ்டில் இந்தியா எங்கடா ஜெயிச்சுது? கிளைவ் லாயிட் டபிள் செஞ்சரி அடிச்சு நாம தோத்துதானே போனோம். இந்த விஷயத்துல மனோகர் போய் எங்கியாவது இந்த மாதிரி தப்பா எழுதுவானா?"

சமீபத்தில் கிருஷ்ணமூர்த்தியைப்பார்தேன்.

மனோகரும் ராஜியும் இப்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டார்களாம். ஒரே பையன் குவீன்ஸ்லாந்து யுனிவர்சிட்டி கிரிக்கெட் டீமில் பெரிய பிளேயராம்"!

சந்திரிகா என்னும் கிருஷ்ணம்மாள் பற்றி விவரம் ஏதுமில்லை.