Tuesday, 11 September 2018

கதையரங்கம் 12 செப்டம்பர் 2018
வக்கீல் வேதாந்தம்
”வா உப்பிலி! என்ன ஸ்கூல் அக்கப்போர் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு?”
“ இல்லேண்ணா! இன்னிக்கு ஸ்கூல் சமாச்சாரம் ஒண்ணும் இல்ல. உங்ககிட்ட பேசணும்னு…!”
“என்ன மென்னு முழுங்கற? போ மன்னி இன்னிக்கு மெந்தியக்குழம்பும் தேங்காய்த்தொகயலும் பண்ணியிருக்கா. நா சாப்பிடும்போது சொல்லிண்டே இருந்தா. உப்பிலிக்கு ரொம்பப்பிடிக்கும்னு! திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி வந்துட்டே! போ போய்ச்சாப்பிடு முதல்ல!”
“வேண்டாம்ண்ணா! ”
உப்பிலியின் குரலில் இருந்த மாற்றத்தை கிரகித்துக்கொண்ட வக்கீல் வேதாந்தம் நிமிர்ந்தார்.
“என்ன கவலை உனக்கு உப்பிலி?”
“ நா கேள்விப்பட்டது……?”
என்ன கேள்விப்பட்டே?”
“அந்த மாங்குடி மிராஸ்தார் சாமா கேஸ நீங்க எடுத்துண்டு இருக்கேளாமே?”
“ உன் வரைக்கும் சேதி வந்துடுத்தா? ஆமாண்டா! எடுத்துண்டிருக்கேன்! என்ன ஃபீஸ் தெரியுமா? ஒரு லட்ச ரூவா! அப்படியே உங்கிட்ட குடுத்துர்ரேன். ஸ்கூலுக்கு வெச்சிக்கோ! அடுத்த ஒரு வருஷத்துக்கு இந்த மாசம் துண்டு அடுத்த மாசம் இடிக்கறதுன்னு நீ விசனப்படவே வேண்டாம்!”
“இல்லேண்ணா! அந்தப்பாவக்காசு ஸ்கூலுக்கு எதுக்கு? வாண்டாம்னா!”
”என்ன உப்பிலி! எனக்கே அட்வைஸா? எது பாவம் எது புண்ணியமெல்லாம் நீயும் நானும் முடிவு பண்றதில்ல. அந்த ரங்கன் பண்ண வேண்டியது!”
“அப்ப அந்த ரங்கந்தான் உங்கள ஒரு லட்ச ரூவாய்க்கு கேஸ் ஒத்துக்க சொன்னானா?”
வேதாந்தத்தின் குரல் கடுமையாகியது.
“உப்பிலி! ஸ்கூல் விஷயம் ஒண்ணும் இல்லேன்னா நீ உள்ள போய் மன்னிட்ட கேட்டு சாப்பிட்டுட்டு புறப்படு!”
“எனக்கு இந்தாத்து சாப்பாடு இனிமே வாண்டண்ணா! நா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன்!”
அடேடே! உப்பிலியா? வா வா! உன்னத்தான் நெனச்சுண்டே இருந்தேன்! வா வந்து சாப்பிட்டுட்டுப்போ! இன்னிக்கு மெந்தியக்குழம்புடா!”
“இல்லேடி! அவனுக்கு இன்னமே நம்மாத்து தளிகை வாண்டாமாம். சார் ஹோட்டல்ல சாப்பிடப்போறார்! விடு போட்டும்!”
“என்னன்னா இது! அவனோட வெளையாடிண்டு..நீ வா உப்பிலி!”
”இல்லே மன்னி! நா கிளம்பறேன்!
உப்பிலி விருட்டெனக்கிளம்ப, மாமி திகைத்து நிற்க, வேதாந்தம் கேஸ் ஃபைலுடன் ஆஃபீஸ் அறைக்குள் போனார்.
காலையில் காப்பி குடிக்கும்போது மாமி கேட்டாள்.
“இப்பவாவது சொல்லுங்கோ! உப்பிலிக்கு என்ன கோவம்?”
‘ அவனுக்கு நான் மாங்குடி கேஸை எடுத்துண்டது பிடிக்கல! எடுத்துக்கக்கூடாதுங்கறான். பாவம் அது இதுன்னு அதிகப்பிரசங்கியாட்டமா பேசினான். போடா வாயை மூடிண்டுன்னுட்டேன். அதான்!”
“நானே கேட்கணூம்னு நெனச்சேன்! எல்லோருமெ பேசிண்டாளே அந்த மாங்குடி மிராஸுதார்தான் எமாத்திப்ட்டார்னு. அவர்ட்ட ஏமாந்த அத்தனை பேருமே சின்னச்சின்ன விவசாயிகளாமே!”
“ஏண்டி உனக்கு இத்தன டீடெய்ல் எப்படி தெரியும்?”
“எல்லாம் டிரைவர்தான் சொல்லிண்டு இருந்தான். அவனுக்குப்போய் நம்ம அய்யா ஏம்மா ஆஜராகிறார்னு அவனுக்கு விசனம்!”
“இன்னமே நான் ஒரு கேஸை எடுத்துக்கணும்னா இவாள்ட்டல்லாம் கிளியரன்ஸ் வாங்க்கிக்கணும் போலருக்கு!’
”அது இல்லேன்னா! அந்த மிராஸ்தரப்பத்தி உங்களுக்கே தெரியும். நாலு மாசத்துக்கு மிந்தி நாம கொடவாசல் போனபோது அத்திம்பேர் அவன் பண்ற லேவா தேவி அயோகியத்தனத்தைச்சொல்லி சொல்லி மாஞ்சு போனாரே!”
“இன்னமே நா கேஸ் எடுத்துக்கணும்னா காந்தி வந்தா மட்டும்தான் ஒப்புக்கணுமா? என் தொழில் வக்கீல் தொழில். எனக்கு என் கிளையண்டும் அவன் குடுக்கற ஃபீஸும்தான் முக்கியம். தொழிலுக்கு துரோகம் பண்ணாம இருக்கணும் அவ்வளவுதான்! கொலைக்குத்தம் பண்ணினவனுக்கே வக்கீல் வெக்கணும் தெரியுமோனோ!”
”அதில்லைன்னா, அவனால அழிஞ்ச குடும்பம் ஒரு கிராமத்துக்கே காணும்னு சொன்னாரே அத்திம்பேர். அதும் அந்த பட்டாளத்தான் வீட்டைப்பிடுங்கிண்டு அவம்பொண்ணை நாசமாக்கி, கீழ்க்கோர்ட்டுல காசு குடுத்து சாதகமா தீர்ப்ப வாங்கிண்டான். அந்த சாமிக்கண்ணு மேல் கோர்ட்டுக்கு போனான்னு அவனையே ஆள வெச்சு கொன்னுப்டான்னு ஊரே பேச்சாயிருக்குன்னு சொன்னாரே!”
”கொடவாசல் அத்திம்பேர்தானே! திண்ணையில உக்காண்டு அக்கப்போரா பேசிண்டு இருக்கார். வாய்க்கு வந்தத உளறார்! நீயும் கேட்டுண்டு எங்கிட்ட வந்து பிலாக்கணம் பாடாத! போ! என்னை கேஸப்படிக்க விடு! அடுத்த திங்கக்கிழமை ஹியரிங் வரும் போலருக்கு!”
வந்தது.
திங்கள் கிழமை
”ஓ! சவரிராஜனா பிராஸிக்யூஷன்? உங்க மாடசாமி கேஸ் டெல்லி வரைக்கும் போயிடுத்து போலருக்கே? போறீரா?”
“இல்லை மை லார்ட்! டெல்லி வக்கீல ஏற்பாடு பண்ணிட்டாங்க!”
”ஓ சரி! இப்ப என்ன சார்ஜ்?”
“ஹோமிசைட் மை லார்ட்! ஓப்பன் அண்ட் ஷட் கேஸ்! நேர்ல பார்த்த சாட்சி இருக்கு!”
“அத நான் இல்ல சொல்லணும்! வேதாந்தம்! உங்க டெஃபென்ஸ் என்ன ப்ளீ?”
“நாட் கில்டிதான் மை லார்ட்!”
”ஓகே பிராஸிக்யூஷன்! ஆரம்பிங்க! சொற்பொழி வெல்லாம் கூடாது!”
சவரிராஜன் விலாவரியாக கேஸை ஆரம்ப முதல் விவரித்தார்.
விவசாயி சாமிக்கண்ணு கொல்லப்பட்ட வேலிக்காத்தான் முள் வெளியிலிருந்து மாங்குடி மிராஸ்தார் சாமா நடந்து போனதை நேரில் பார்த்த மாங்குடி ஜோஸியர் மத்தளராஜு முக்கியமான சாட்சி. அதுவும் கொலை நடந்த கால் மணி அவகாசத்தில் சாட்சி மிராஸ்தார் சாமாவை மேற்படி இடத்தில் பார்த்திருக்கிறார்.
”மைலார்ட்! ஃபர்ஸ்ட் டிகிரி மர்டர், வாலண்டரி மான்ஸ்லாட்டர் அண்ட் கல்பபிள் ஹோமிசைட்! மென்ஸ் ரியா ப்ளஸ் ஆக்டஸ் க்யூரியஸ் ரெண்டும் வெட்ட வெளிச்சம்!”
”உங்க லைன் ஆஃப் அர்க்யூமெண்ட் என்ன வேதாந்தம்?”
“கேஸுல அடிப்படையே தப்பு மை லார்ட்! கொடுக்கல் வாங்கல் பிஸினஸுல ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் வர வாய்ப்புக்கள் இருக்கு. அதெல்லாம் மென்ஸ் ரியாவுல கொண்டு வர்ரது அபத்தம். விக்டிமோட ஏதோ சம்மந்தம் இருக்குங்கறதுக்காக ஒரு இன்னசண்ட் ஆசாமியை கிரைமோடு சேர்த்து மென்ஸ் ரியாவைத்தேடிண்டு போய் ஒட்ட வெக்கறதும்…... ஐயாம் சாரி மைலார்ட்! வெரி ஜுவெனைல் ஆர்க்யூமெண்ட்!”
“ஐ அப்ஜெக்ட் மை லார்ட்! வேதாந்தம் இன்சல்டிங்காப்பேசறார்!”
“வேதாந்தம்! தட் வாஸ் ஹார்ஷ்!”
”சாரி மை லார்ட்! நா சொல்ல வந்தது கர்த்தார் சிங் வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் கேஸ எப்படி வேணா அப்யூஸ் பண்ண முடியாது! சாட்சி சொல்வதெல்லாம் வெறும் சர்காம்ஸ்டான்ஷியல் மட்டுமே! அஸால்ட் அண்ட் பாட்டரி”, அதாவது அன்லாஃபுல் கண்டின்யூட் டச்சிங் என்பதை அவர்களால் கிட்டத்துல கூட கொண்டு வர முடியல!”
“எக்ஸ்க்யூஸ் மி மைலார்ட்! ஒரு குறுக்கீடு!”
”சொல்லுங்க சவரிராஜன்?”
“ஃபாகன் வெர்ஸஸ் மெட்ரோபாலிட்டன் போலீஸ் கமிஷனர்! இங்லாண்ட் அண்ட் வேல்ஸ் ஒரு கேஸ் போதும். இந்த கேஸுக்கு அப்படியே பொருந்தும் மைலார்ட்!”
”வேதாந்தம்?”
“அப்சர்ட் மை லார்ட்! அவர் சொன்ன கேஸ் ஒரு ஓப்பன் அண்ட் ஷட் கேஸ். இது அப்படி இல்லை!”
“அக்யூஸ்டை நேரில் பார்த்த சாட்சி இருக்குங்கறாரே?”
”இல்லை மை லார்ட்! இங்க நெறய சந்தேகங்கள் இருக்கு!”
” கொஞ்சம் எலாபொரேட் பண்ணுங்க வேதாந்தம்!”
”ஸ்ஹ்யூர் மை லார்ட்! மாங்குடி சாமா அன்னிக்கு மத்தியானம் திரு நாகேச்வரம் லட்சுமி தேட்டர்ல சினிமாவுக்குப்போய்ட்டு வர்ர வழியில அப்படியே காலார நடக்கலாமேன்னு காரை அனுப்பிச்சுட்டு ரெட்டைப்பிள்ளையார் கோவில வழியா அந்த கருவேலங்காட்டு ஒத்தையடிப்பாதையில நடந்து வந்திருக்கார். அதப்பார்த்ததாலேயே அவர் மேல குத்தம் சுமத்த முடியாதே மை லார்ட்! சாமிக்கண்ணுவுக்கு எதிரிகள்னு பார்த்தா நான் இன்னும் மூணு நாலு பேரைச்சொல்லுவேன்!”
”வேதாந்தம்! பிராஸிக்யூஷன் சொன்ன ஃபாகன் கேஸ் ஒரு பிரிசீடெண்ட் இல்லியா?”
”பிரொசீடெண்ட் என்னவோ சரி! ஆனா ரெலெவன்ஸ் இல்லவே இல்லை! மை லார்ட்! நான் வேற பொருத்தமான கேஸ் சொல்றேன்!”
“இந்தியன் கோர்ட் கேஸா சொல்லுங்க! இங்க்லேண்ட் அண்ட் வேல்ஸெல்லாம் இப்ப சப்ஜாடா மாறியாச்சு! இன்னமும் கலோனியல் கேஸெல்லாம் ரெஃபெரன்ஸ் குடுத்து காலத்த ஓட்ட முடியாது!”
“அஃப் கோர்ஸ்! ஆர் வெர்ஸஸ் டால்சன், நதுலால் வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் எம் பி, மல்ஹன் வெர்ஸஸ் கோரா பிபி குட்டி கேஸெல்லாம் பாருங்க மை லார்ட்!. ஒண்ணுல கூட கிளியர் சாட்சியோ அல்லது மென்ஸ் ரியா ப்ளஸ் ஆக்டஸ் ரியூஸோ சேர்ந்து இல்ல! ஆகவே ஒரு கேஸ் கூட நிக்கல!”
” என்ன சொல்ல வறீங்க?”
சாரி மை லார்ட்! பிராஸ்க்யூஷன் ஹோம் ஒர்க் ரொம்ப தேசலா இருக்கு!”
”அக்ஸெப்டட் வேதாந்தம். சவரிராஜன்! உங்க ஸ்டார் விட்னெஸைக்கூப்பிடுங்க!”
“ சரியா சொல்லித்தந்திருக்கீங்களா சவரிராஜன்?”
வேதாந்தம் கிண்டலாகக்கேட்க, சவரி முறைக்க மைலார்ஷிப்புமே சிரித்தார்.
ஜோசியரை வைத்து லீடிங் கேள்விகளாய்க்கேட்டு மாங்குடி சாமாதான் கொலை பண்ணியிருக்கார் என்றும் சாமிக்கண்ணுவை குத்தினதை ஜோஸியர் நேரில் பார்த்தார்போல பிராஸிக்யூஷன் சவரிராஜன் அழகாக ஜோடித்தார். வேதாந்தம் மௌனமாக கவனித்துவிட்டு கிராஸின்போது ருத்ர தாண்டவம் ஆடினார்.
“ஜோசியரே! மாச வருமானமெல்லாம் எப்படி?”
”அந்த ஆதிபுரீச்வரி அருளால ஏதோ வர்ரது!”
“அதான் எத்தனைன்னு கேட்டேன்?”
“என்ன ஒரு மாசம் அம்பாள் மனசு வெச்சா பதினஞ்சாயிரம் வரைக்கும் வரும். இல்லென்னா அஞ்சாயிரத்தக்கூடத்தாண்டாது!”
”மாங்குடியில மட்டும் என்ன வருமானம்வர்ரது?”
”ஊர் கெட்டுப்போச்சுன்னா! யாரும் பெரியவாளையும் ஜோதிஷத்தையும் மதிக்கறதில்ல. அதனால அந்தூர்ல நா யாருக்கும் சொல்றதில்ல. சுத்து வட்டார உர்கள்ள என்னை மதிக்கறா! இதுல பாருங்க, விட்டலூர், பௌண்டரிகபுரம், திருவிடமருதூர், புத்தகரம்னு அத்தனை பேரும் என்னையே சுத்திசுத்தி வரா! அவாளுக்கு ஏதோ என்னாலான ஜோஸ்ய சேவையைப்பண்ணிண்டு வரேன்! ஊர் நன்னா இருக்கணும் இல்லியா? என்ன நாஞ்சொல்றது!”
“போன வருஷம் மாங்குடி சாமா வீட்டுல ஏதோ யாகம் பண்ணினீங்களாமே? உண்மைதானா?”
“அது எதுக்குன்னா சம்மந்தமில்லாம இப்போ?”
ஜோஸியர் இப்போது பரிதாபமாக பிராஸிக்யூஷன் வக்கீலைப்பார்த்தார்.
“மிஸ்டர் சாட்சி! இங்க நாந்தான் ஜட்ஜ்! சம்மந்தம் இருக்கா இல்லியானு நாந்தான் முடிவு பண்ணனும்! அவர் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லும்!”
“மன்னிக்கணூம் பெரிய அய்யா! சொல்றேன்! ஆமா நாந்தான் யாகம் பண்ணி வெச்சேன்?”
”என்ன நடந்தது அப்ப?”
”அதொண்ணுமில்ல வக்கீல் சார்! அவங்களுக்கு நம்பிக்கையெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏதோ ஆடம்பரத்துக்காக பண்ணினா. என்னையெல்லாம் கூட சரியா மதிக்கல! அவ்வளவுதான் சொல்லணும். மீதி பேச்சு விரயம்தன்!”
“இல்லியே நான் கேள்விப்பட்டது வேற மாதிரின்னா இருக்கு?”
”சார் என்ன கேள்விப்பட்டேள்?”
”அந்த யாகத்துல போடறதுக்கு தங்க தாயத்து பண்ணனும்னு பத்தாயிரம் ரூபா காசு வாங்கி, கடைசில அதுல தங்கமே இல்லேன்னு மாங்குடி சாமா கேள்வி கேட்க, நீங்க ஏதோ அடாவடியா பதில் சொல்லி, ஆதிபுரீஸ்வரி பேரச்சொல்லி சாபம், தெய்வ குத்தம்னு பயமுறுத்தினேளாம். அதுல கோபப்பட்டு மாங்குடி சாமா உம்மை வீட்டை விட்டு வெளியே துரத்தினாராம். அதுலேர்ந்துதான் மாங்குடில யாரும் உம்ம கிட்ட ஜோசியத்துக்கோ பூஜைக்கோ வர்ரதில்லைன்னு………”
“இல்லென்னா! அதெல்லாம் வெறும் புரளி..!”
”அப்ப நீர் சொல்றது மட்டும் நெஜமா? மாங்குடி சாமா சொல்றது புரளியா?”
”ஆமான்னா! அவர் ஒரு துஷ்டர்! கொலையே பண்ண அஞ்சல பாருங்க! சாமிக்கண்ணுவ கொன்னுப்டாரே!”
”ஜோஸ்யரே! ஜாக்கிரதையாப்பேசும்! இன்னும் தீர்ப்பு வரல!”
“மன்னிச்சுக்கோங்கோன்னா!”
“உம்ம வண்டவாளம் வெளிப்பட்டதுனாலதான் நீர் மாங்குடியில் தொழில் பண்ண முடியல. அதான் சாமா மேல காழ்ப்போட எதிரா சாட்சி சொல்றீர்னு நா சொல்றேன்!”
வேதாந்தம்! யுவர் பாயிண்ட் ஈஸ் டேகன். அவரை விட்டுடுமே!”
இந்த ரீதியில் வேதாந்தம் ஜோசியரை சுழற்றி சுழற்றி கொக்கி போட்டு குழம்ப அடித்தார். சாட்சி முன்னுக்குப்பின் முரணாக உளற ஆரம்பிக்க அஸ்திவாரமே கலகலத்துப்போய்விட்டது. கூடவே சாமிக்கண்ணுவின் எதிரிகள் என்று இரண்டு பேரை சம்பவங்களோடு நிலை நிறுத்தி, அந்த ரெண்டு பேருக்குமே அலிபை ரொம்ப வீக்காக இருக்க, ஏன் இவர்களில் ஒருவர் கொன்றிருக்கக்கூடாது என்று திசை திருப்பிவிட்டார்.
மொத்தத்தில் பிராஸிக்யூஷனின் பந்தல் சரிந்து விழ, சந்தேகத்தின் பயனை மாங்குடி சாமாவுக்கு கொடுத்து கோர்ட் அவரை விடுலை பண்ணி விட்டது.
வெளியே வந்த வுடன் முதக்காரியமாக மாங்குடி சாமா, “எலே அந்த ஜோஸ்யனை கூட்டி வாங்கடா! வேஷ்டியக்களத்தி கோமணத்தோட ஓட வெக்கறேன்பாரு!..........” என்று ஒரு தேர்ந்த தஞ்சாவூர் வசவு வெய்ய, வேதாந்தம் அவனை அதட்டி அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தி அனுப்பினார்.
மாங்குடி சாமா மிராஸ்தார் பந்த்தாவை வேதாந்தத்தை உபசரிப்பதில் காட்டினான். அவரை வீட்டுக்கு அழைத்து பெரிய விருந்து கொடுத்தான். விட்டலூர் மிட்டாதார், பௌண்டரிகபுரத்துலேர்ந்து ஒரு டாக்டர், திருவிடைமருதூர் ரைஸ் மில் ஓனர் என்று அவனுடைய சீட்டுக்கட்டு ஜமாவையும் அழைத்து தடபுடலாக அசத்தியிருந்த விருந்தில் சினி ஆக்ட்ரெஸ் ஒருத்தியும் வந்திருந்தாள்.
“ எனுக்கு நெறைய பணம் வராத இருக்குங்கோ! நீங்க கேஸ் போட்டு வாங்கித்தந்தா நான் நெறைய ஃபீஸ் தருவேன்!”
ராமலட்சுமிஸ்ரீ வேதாந்தத்துக்கு தன் விசிட்டிங் கார்ட் கொடுத்தாள்.
”அடவை ராமுடு” என்னும் தெலுங்கு படத்தில் என் டி ராமராவ் ஜெயசுதாவை ஆற்றங்கரையில் கேலி பண்ணிப்பாடும் சீனில் தோழியாக ஒரே ஒரு நிமிடம் வந்திருக்கும் ராமலட்சுமிஸ்ரீ!
சினி ஆக்ட்ரெஸ்!
அன்று இரவே வேதாந்தம் ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்று கிளம்பிவிட்டார்.
அடுத்த நாள் ஒன்றும் இல்லை. அதற்கு அடுத்த நாள் காலை உப்பிலி ஓடி வந்தான்.
“மன்னி! மன்னி! அண்ணா இல்லியா?”
“என்னடா ஏன் இப்படி அரக்கப்பரக்க வரே! அண்ணா கேஸ் ஜெயிச்சாரோன்னொ, அந்த மாங்குடி சாமா அவரக்கூப்ட்டு அவாத்துல விருந்து அதுன்னு ஏக தடபுடல் பண்ணி ஒரு லட்சம் ஃபீஸும் குடுத்தான். மாமா அப்படியே ஸ்ரீரங்கம் போய்ட்டு நேத்தி இருந்துட்டு இன்னிக்கு காலம்பரதான் வந்தா! உடனே குளிச்சார்! பூஜை ரூமுக்குப்போய்ட்டா! ஒண்ணும் சாப்பிடலை! நானும் அவர் வரட்டுமேன்னு காத்துண்டு இருக்கேன்.!”
அரைமணி நேரம் கழித்து வேதாந்தம் வேளியே வந்தார். கொஞ்சம் சோர்வாக இருந்தார்.
“அண்ணா! அண்ணா! ந்யூஸ் தெரியுமா?”
”யாரு உப்பிலியா? ஏதோ கோச்சுண்டு போனேயேடா! இப்ப எங்க வந்தே? ந்தாடி! அவங்கண்ணுல சோறு காப்பின்னு ஒண்ணையும் காமிக்காதே சொல்லிட்டேன்!
” மன்னிச்சுக்கோங்கோண்ணா!
என்னடா ஏதோ ந்யூஸுன்னியே? கவர்ன்மெண்ட் கவுந்துடுத்தா?”
”அதில்லைண்ணா! நேத்து மாங்குடி சாமாவ யாரோ அடிச்சுக்கொன்னிருக்கா! விவசாயக்கலப்பையால மண்டையில் போட்டு தலை பொளந்து தட்சணமே ஆள் காலியாம்!”
கையில் வேதாந்தத்தின் பயணத்துணிமணிகளுடன் மாமி பதறியபடி ஓடி வந்தாள்.
“என்னடா சொல்றே உப்பிலி! கலப்பையால அடிச்சுட்டாளா?”
”ஆமாம் மன்னி! இன்னிக்கு தமிழ் பேப்பர்ல அல்லோலகல்லோலப்படறதே!”
”அடக்கஷ்டமே! ஊர் முழுக்க பகைன்னா இப்படித்தானாகும்! பகவான்னு ஒருத்தர் எதுக்கு இருக்கார்! அது சரி ஏன்னா! உங்க வேஷ்டியெல்லாம் ஒரே செம்மண் புழுதியா இருக்கு! எங்கியாவது புரண்டுண்டே வந்தேளா?”
”புழுதின்னா நன்னா தோச்சுப்போடேண்டி! அழுக்குப்பண்ணிக்கக்கூடவா எனக்கு உரிமை இல்லை! அத விடு, உப்பிலிக்கு காபி கொடேன்!’
“இதோ! உங்களுக்கும் கொண்டு வரேன்!”
“இல்ல எனக்கு வாண்டாம்! நான் இன்னிக்கு முழுக்க உபவாசம்!”
உப்பிலி வேதாந்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கவஸ்திரத்தால் முகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்ட வேதாந்தம் கேட்டார்.
“உப்பிலி! அந்த ஃபீஸ் லட்ச ரூவாய ஸ்கூலுக்கு எடுத்துக்கறியா சொல்லு?”
”எடுத்துக்கறேன் அண்ணா! சந்தோஷமா எடுத்துக்கறேன்!”
ஸ்பஷ்டமாகச்சொன்னான்
“பரசுராமரே சொல்லும்போது எப்படி வாண்டாம்னு சொல்றது!”
முற்றும்

No comments:

Post a Comment