எங்கோ இருந்தாலும்……
“அப்பாடி! இப்பவாவது ஒனக்கு புத்தி வந்துதே! எப்பப்பாரு வேல வேலன்னு..!”
“சும்மா இரும்மா! இப்பவும் நா முதல் வாரம் செமினாருக்குத்தான் போறேன்! அடுத்த வாரந்தான் பத்ரியும் சுதர்சனும் வர்ராங்க!”
“நெனச்சேன்! போறுண்டி இந்த டாக்டர், மருந்து ஹாஸ்பிடல்லாம்! ரெண்டு வாரத்துக்கு குடும்பத்தோட போய்ட்டுதான் வாயேன்!”
“அம்மா! உனக்குத்தெரியாதா! அப்ப ஏன் என்னை டாக்டருக்குப்படிக்க வெச்சே?”
”நானா படிக்க வெச்சேன்? நீயும் உங்கப்பாவுமா சேர்ந்து என்ன அழிச்சாட்டியம் பண்ணி மெடிக்கல் காலேஜுல சேர்ந்தே நீ?”
“சரி அதெல்ல இப்ப இண்டர்நேஷனல் கால்லயே வாக்கு வாதம் பண்ணணுமா! ஒண்ணும் கவலைப்படாத. நான் வர்ர சண்டே கிளம்பி ஜெனீவா போறேன். செமினார் வெள்ளிக்கிழமை வரைக்குந்தான்! அன்னிக்கு ராத்திரியே இவா ரெண்டு பேரும் வந்துடுவா. அடுத்த ஒன் வீக் லூஸெர்ன், டிட்லிஸ், பிலாட்டஸ்னு சுத்தப்போறோம்!” பத்து நாளைக்கப்றந்தான் லண்டன் திரும்பறோம்! ஓகேவா?”
“சரிடி! பாரு சுதர்சனுக்கு அஞ்சு வயசாய்டுத்து! அடுத்த கொழந்தைக்கு லேட்டாகாம ஏற்பாடு பண்ணிக்கோ இந்த டிரிப்புல!”
“அடச்சீ! யூ ஆர் வல்கர் அம்மா! வெய் ஃபோன!”
டாக்டர் வத்சலா ஜெனீவாவுக்குக்கிளம்பிப்போக பத்ரி வீட்டில் சுதர்சனைப்பார்த்துக்கொண்ட வாரம், லண்டனில் மழை, லார்ட்ஸில் கிரிக்கெட் லோக்கல் ஃபுட்பால், சோஹோவில் ரகளை என்று சம்பிரதாயமாக எல்லாம் நடந்தேறியது.
“சுதர்சன்! ரெடியா இரு! இன்னிக்கு ஃப்ளைட் நமக்கு!”
“ஐ நோ டாட்! வில் மாம்மா கம் டு த ஏர்போர்ட்?”
”ஷ்யூர் ஷி வில் கம்! மாம்மா வில் பி மிஸ்ஸிங் யூ!”
ஆனால் அன்று மாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஜெனீவாவின் காயிண்ட்ரின் ஏர்போர்ட்டில் தரையிறங்கினபோது டாக்டர் வத்சலா அவர்களை வரவேற்க வரவில்லை.
டைஜெஸ்டிவ் டிஸார்டர் செமினாரில் கலந்துகொண்ட மருத்துவ மாணவியரில் உல்யானா பெட்ரொவ்ஸ்கி என்னும் உக்ரெயின் பெண் ரகளை செய்துவிட்டாள்.
லஞ்ச் முடிந்த அடுத்த செஷன் என்பதால் கொஞ்சம் டல்லாகத்தான் பேச்சு இருந்தது. அப்போது பின் வரிசையில் மெடிக்கல் மாணவர்கள் பக்கத்தில் பெரிய கூச்சல். உல்யானா எழுந்து டேபிள் மேல் நின்று கொண்டு ஆடிப்பாடி கூச்சலிட ஆரம்பிக்க ரகளையாகியது. பேச்சு நிறுத்தப்பட்டு, செமினாரின் அலுவலர்கள் ஓடி வர உல்யானா குடித்திருப்பது போல ஆட்டம்போட, ஆர்கனைசர்கள் கலங்கி, கோபமுற்று, அவளை அப்புறப்படுத்த முயலும்போது அவளுக்கு வலிப்பு வந்து விலுக் விலுக்கென்று உதறல் எடுத்து கீழ விழ, அவளை எதேச்சையாகத்தாங்கிக்கொண்டவள் டாக்டர் வத்ஸலா.
“என்ன ஒரு ஒழுங்கீனம்! செமினாருக்கு மத்தியானம் குடித்து விட்டா வருவது?”
“இந்த கம்யூ…(குரலைத்தாத்திக்கொண்டு) இந்த ஊரே இப்படித்தான்!”
“முதலில் கொண்டு போய் குளிப்பாட்டி அடுத்த ப்ளேனில் ஊருக்கு அனுப்பி வையுங்கள்!”
“அவளின் காலேஜுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்!”
ஆனால் வத்ஸலாவுக்கு முதலில் அவளைச்சரிப்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றியது.
“நோ நோ! முதலில் இவளை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். நான் கூடப்போகிறேன்!”
“நீங்கள்?”
“செமினார் டெலிகேட் தான். டாக்டர் வத்சலா. எண்டோக்ரினாலஜிஸ்ட்! ராயல் இங்லாண்ட் ஹாஸ்பிடல்!”
“டாக்டர்! நீங்களே ஒரு எக்ஸ்பர்ட்! என்ன ட்ரீட்மெண்ட்?”
“முதல்ல ஷுகர் இண்ட்ராவீனஸ் தரணூம்! எத்னால் இன் பிளட் அவளோட ஷுகரைக்கீழே தள்ளியிருக்கும்!”
”செக்!”
“வைடமின் தியாமைன் டு ஸ்டாப் சீஷர்!”
”செக்!”
”ப்ளட் கான்சண்ட்ரேஷன் எவ்வளவு?”
“400க்கு கீழேதான் டாக்டர் வத்சலா!”
“குட்! அப்ப ஹெமோடையாலிஸிஸ் வேண்டாம். ஆக்ஸிஜன் தெராபிக்கு ஏற்பாடு பண்ணுங்க!”
“அண்ட் டாக்டர் வத்சலா! இந்தப்பெண்ணுடன் யாரும் வரவில்லை. இரவு எப்படி தனியாக…..?”
“நான் இருக்கிறேன்! இப்ப டைம் என்ன? ஓஹ்! மை காட்! என் கணவரும் குழந்தையும்…!”
“பத்ரி! வந்தாச்சா! சாரி சாரி சாரி!”
“ய டாக்டர் ஈஸ் ஆல்வேஸ் ய டாக்டர்!
”சாரி பத்ரி! வெரி சாரி!”
”கம் ஆன் வத்ஸு! நா சும்மா ஜோக் பண்ணினேன்! உனக்கு ஒண்ணும் இல்லியே? நான் செமினார் டைரகடர்ட்ட பேசினேன். அவர்தன் ரகளையைச்சொன்னார்! எப்படி இருக்கா உன்னோட உக்ரெயின் பேஷண்ட்?”
”பத்ரி?! யூ ஆர் ய டார்லிங்! நா ராத்திரி வர முடியாது! சுதர்சன சாமாளிச்சுப்பியா? குழ்ழந்தை ரொம்ப டிஸப்பாயிண்ட் ஆயிருப்பான்!”
”நான் பாத்துக்கறேன்! நீ பேஷண்ட்ட கவனிச்சுட்டு வா!”
உல்யானா தூங்கும்போது வத்சலாவும் லேசாகக்கண் அயர்ந்தாள்.
ஃபோன்!
“என்னடி! செமினாரெல்லாம் முடிஞ்சதா? அவா ரெண்டு பேரும் லண்டன்லேர்ந்து வந்துட்டாளா? குழந்த ஏங்கிப்போய் இருப்பான் இந்த ஒரு வாரத்துல. அவனோட நெறைய டைம் ஸ்பெண்ட் பண்ணு, என்ன?”
“அம்மா! அம்மா! வென் வில் யூ ஸ்டாப்! சரி, அப்பா இருக்காளா? குடேன்!”
”ஹவ் ஈஸ் யுவர் வெகேஷன் வத்ஸு?”
”நாட் யெட் பிகன் டாட்!”
”என்ன ஆச்சு?”
”………………!”
“வத்சு! லிஸன் டு மீ! இது வெறும் ஆல்கஹால் சமாச்சாரம் இல்லன்னு தோணறது! செமினாருக்கு வந்த மெடிக்கல் ஸ்டூடெண்ட் மத்தியான வேளையில் குடிக்கறதா? பிஸாயர்! நீ அவகிட்ட பேசினயா?”
”பேசினேன் டாட்!”
”ஜஸ்ட் டெல் மீ! அவளுக்கு கான்சண்ட்ரேஷன் கஷ்டமா இருந்ததா? வயத்த வலி, அடிக்கடி கேஸ் டிரபிள், கோணாமாணானு மோஷன் போகறது, சைனஸைட்டிஸ், அடிக்கடி சோர்வு அப்பறம், மயக்கம்? எல்லாத்துக்கும் எனக்கு பதில் சொல்லு!”
”கூல் டாட்! இது வெறும் ஆல்கஹாலிக் சமாச்சாரம்ப்பா! ஒய் ஆர் யூ எக்ஸைட்டட்?”
“வத்ஸு! ஜஸ்ட் டூ வாட் ஐ சே! நான் சொன்னத எல்லாம் செக் பண்ணு! கால் மி இன் ஒன் ஹவர்!”
” இப்பவே அங்க நடு ராத்திரியாச்சேப்பா!”
”நோ நோ! நான் முழிச்சுண்டுதான் இருப்பேன்! கால் மி அகெயின்!”
…………………………………….
“டாட்! யூ ஆர் ஸ்பாட் ஆன்! நீங்க கேட்ட எல்லாத்துகும் பதில் பாஸிடிவ்!”
”பெருமாளே! வத்ஸு! அந்தப்பொண்ணு குடிக்கல வத்ஸு! அவளுக்கு இருக்கறது ஆண்டி ப்ரூவரி சிண்ட்ரோம்!
”டாட்! வாட் ஆர் யூ சேயிங்?”
”எஸ் மை டியர் டாட்டர்! ”அவளுக்கு வந்திருக்கறது அபூர்வமான கண்டிஷன்! அவ ஒரு பொட்டு கூட ஆல்கஹால் குடிக்கல. அவளோட உடம்பே ஆல்கஹாலைத்தயார் பண்ணறது!
”என்ன டாட் இது?”
”ஆமாண்டா! 1940லதான் இதயே கண்டு பிடிச்சா. Abnormal Gut Fermentation!
“என்ன ட்ரீட்மெண்ட்ப்பா?
“வெரி சிம்பிள் வத்ஸு! எல்லா ஷுகர் சமாச்சாரங்களை ஒழி! கார்போஹைட்ரேட்கூட குறைச்சுடு. மினெரல் வைட்டமின் சப்ளிமெண்ட் குடு. அவளோட உடம்புல இருக்கற ஃபங்கையையும் பாக்டீரியாவையும் துரத்தணும்! நெறைய புரோபியாடிக் ஃபுட் குடுக்கணும்! கொஞ்ச நாள்ள சரியாய்டுவா! ஆனா இன்னமே அவளோட லைஃப் ரொம்பக்கஷ்டம் வத்ஸு! சின்ன வயசு வேற! ஐ பிட்டி ஹர்!”
“தாங்க் யூப்பா! ஒரு நிமிஷம் அம்மாட்ட குடுங்கோ!”
”சொல்லுடி! அங்கயும் போய் ஹாஸ்பிடல் மெடிசன்னு இங்கேர்ந்து அப்பாவும் உன்னோட கூட்டுச்சதியா?”
“மை டியர் வேதம்! உம்பொண்ணு இங்க பெரிய விஷயம் பண்ணியிருக்கா! ஆச்சு இதோ ஹாஸ்பிடலுக்கு எல்லா அட்வைஸும் குடுத்துட்டு நேர ஹோட்டலுக்குப்போய் பத்ரியோட ஜாயின் பண்ணிக்கப்போறேன்!”
“யேய் வத்ஸு! பிலாட்டஸ் அவ்வளவு நன்னா பனி படர்ந்து இருக்குமாமே! ஃபோட்டோ எடுத்து அனுப்புடி!”
“பிலாட்டஸுக்கெல்லாம் யாரு போப்போறா?”
“அப்ப எங்க?”
“உனக்கு அடுத்த பேரனோ பேத்திக்கோ ஏற்பாடு பண்ணப்போறோம்!”
“வெட்கங்கெட்டவளே! சீ! வெய்டி ஃபோனை!”
“வேதம் நீ என்ன இவ்ளோ வெட்கப்படறே? என்ன சொன்னா வத்ஸு?”
கேட்ட டாக்டர் வைகுண்டத்துக்கு பதில் சொல்லாமல் உள்ளே ஓடினாள் வேதவல்லி!
No comments:
Post a Comment