Thursday, 8 March 2018

”புகை மூட்டம்.....!”

“That which happened inside us, no one can take away from us again, not even ourselves"!

- André Brink’s novel, An Instant in the Wind

”வா ராகவா! ஜர்னி நல்லா இருந்ததா?”

”ஓயெஸ்! பாவம் உன் டிரைவரத்தான் ஸ்டேஷன்ல ஒரு மணி நேரம் காக்க வெச்சுட்டேன்!”

”ஆமாண்டா! சொன்னான், என்ன ஆச்சு?”

”நாந்தான் கொஞ்சம் ஸ்டேஷன்ல அப்படியே உக்காந்துட்டேன்!”

“ஏன் என்ன ஆச்சு! உடம்பு கிடம்பு சரியாயில்லியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல! எனக்குதான் பழைய நினைவு! நோஸ்டால்ஜிக்!!”

”அதென்ன எனக்குத்தெரியாத உன்னோட கடந்த காலம்! சொல்லுப்பா!சொல்லுப்பா!”

”சரி, இந்தா காஃபி சாப்பிடு!”

”மதுரைல டிகிரி முடிச்சவுடனே எனக்கு திண்டுக்கல்லு காலேஜுலதான் முதல் வேல. கெமிஸ்டிரி லாபுல அஸிஸ்டண்ட். அங்க ஹாஸ்டல்ல தங்கினேன். வாராவாரம் சனிக்கிழமை காலையில திண்டுக்கல்லுக்கு வரும் பாசஞ்சர் ஒண்ணு அஞ்சரைக்கெல்லம் புறப்படும். அதுல ஏறிட்டேன்னா ரெண்டு மணி நேரத்துல மதுரைக்குப்போய்டும். எவ்வளவோ டிரெயின் இருந்தாலும் எனக்கென்னவோ இந்த பாசஞ்சர்தான் மனசுக்கு பிடிச்ச வண்டி.”

”ஏண்டா அதுல அப்படி என்ன?”

”என்னமோ தெரியலடா. அந்த விடியற்காலத்துல சில்லுனு காத்து, ஒவ்வொரு ஊரும் முழிச்சுக்கற நேரம். சூரியன் இன்னும் எழும்பியிருக்காது. அவசரமே இல்லாத நிலமையில ஊர்கள் ஒரு வித மெத்தனமா இருக்கும் அழகே தனி. ஜன்னல் சீட்ல உக்காந்துண்டு இதையெல்லாம் பாத்துண்டே ரசிச்சிண்டு போவேன். பாசஞ்சர் வேறயா நின்னு நிதானமா ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரெண்டு நிமிஷம் நிறுத்தி ஆர அமரப்போகும். எனக்கென்னமோ தூக்கமே வராம படு சுறுசுறுப்பா இருக்கும் நேரம் அது!”

”சரி அதுக்கும் கோடைரோடு ஸ்டெஷனுக்கும் என்ன சம்மந்தம்?”

”சொல்றேன். காலேஜுல சேர்ந்த ரெண்டாம் மாசம்னு நினைவு. இந்த மாதிரி வேடிக்கை பார்த்துண்டு போயிண்டிருந்தேன். கோடை ரோடு ஸ்டேஷன் வந்தா நெறய கூட்டம் இறங்கும். ஆனா எல்லாரும் கோடைக்கானலுக்குப்பொற அவசரத்துல இறங்கி ஓடுவாங்க. போறாததுக்கு டாக்ஸிக்காரங்க வேற கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்ட்டா எட்டிப்பார்த்து கோடை கோடைன்னு கூவி சவாரி கேப்பானுங்க. சில நிமிஷங்கள்ளயே காலியாகிடும். ஆனாலும் டிரெயின் கிளம்பாது. எதிர்க்க வரும் எக்ஸ்பிரஸ்சுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து இதக்கோடை ரோடுலயே பத்துப்பதினஞ்சு நிமிஷம் போட்டுடுவாங்க. நானும் திடீர்னு அனாதையான ஸ்டேஷன் பிளாட்பாரத்தை ரசிச்சிண்டு இருப்பேன்!”

“காலி பிளாட்ஃபாரத்துல என்னடா ரசிப்பு?”

”உனக்குத்தெரியாதுடா! காலி பிளாட்ஃபாரம் ஒரு தனி கவிதை! கொஞ்சம் முன்னாடி வரைக்கும் சுறுசுறுப்பா இருந்துட்டு திடீர்னு ஒரு கணத்துல காலியாகிடும். அங்க நடமாடின மனுஷங்களுடைய சுகதுக்கமெல்லாம் அப்படியே காத்துல தொங்கும். நாம அப்படியே அதத்தொட்டு உணர முடியும்! சிரிப்பு, அழுகை, பிரிவு, சண்டை, துக்கம் எல்லாம் அங்கயே காத்துல ஒரு சஸ்பென்ஷன்ல இருக்கறா மாதிரி படும் எனக்கு!”

”சரி சரி நீதான் எழுத்தாளனாச்சே! சஸ்பென்ஸ சொல்லுடா எனக்கு தாங்கல!”

”அன்னிக்கும் அதுமாதிரி காலியான ஸ்டேஷன் பிளஃபாரத்தைப்பாத்து ரசிச்சிண்டு இருந்தேன். அப்பதான் அவளப்பாத்தேன்!”

“அதச்சொல்லு! பெண் பிள்ளை இல்லாம என்ன பழைய நினைவு வேண்டியிருக்கு!”

“இர்றா கேளு முழுசா! அவ கூடையில பூ வெச்சு வித்துண்டு இருந்தா. இந்த நேரத்துல பூவா? நா பாத்துண்டே இருந்தேன். நல்ல களையான முகம். நெத்தியில பெரிய பொட்டு. கொண்டையாமுடிஞ்ச முடி. கணுக்காலுக்கு மேல தூக்கிக்கட்டின புடவை. அந்த விடிகாலையிலயும் குளிச்சு லட்சணமா இருந்தா. ஒவ்வொரு ஜன்னலா வந்து சன்னமான குரல்ல பூ பூன்னுட்டு நகருவா! அப்ப யாரு அரைத்துக்கத்துலேர்ந்து எழுந்து பூ வாங்குவாங்கன்னு தோணும். சில நிமிஷங்கள்ல நகர்ந்துடுவா. எனக்குதான் அவ முகம் பளிச்சுனு மனசுல பதிஞ்சு போச்சு”.

”அட அவ்வளவுதானா?”

”இரு! அப்புறம் ஒவ்வொரு வாரமும் கோடை ரோடுல அவள பார்ப்பேன். ஒரே ருட்டீன்தான். சில நிமிஷங்கள். மெலிசான குரல்ல பூ. மெதுவா நடந்து அரை வெளிச்ச பிளாட்ஃபாரத்துல அமிழ்ந்து போய்டுவா”

”நீ அப்படியே ரொமாண்டிக்கா பூ வாங்கியிருப்பியே?”

”சே சே! நா பூ வாங்கினதே இல்ல, ஒரு தரம் தவிர!”

”அதச்சொல்லு! அதுலதான் மாட்டர் இருக்கு!”

”சம்மர் லீவு வந்த வாரம் அடுத்த ஒரு மாசம் லீவு. ரொம்ப ஆவலா கோடை ரோடுல அவளுக்காக காத்துண்டு இருந்தேன்.”

”வரலியா?”

”வந்தா! அன்னிக்கி என்னமோ என் ஜன்னல் கிட்ட கொஞ்ச நாழி நின்னா. எனக்குமே ஏதோ தோணித்து. லேசா சிரிச்சென். அவளும் சிரிச்சா. பூ வாங்கிக்கிங்களேன்னு சொன்னா. மெல்லிசான பூனைக்குரல். நானும் சட்டுனு பத்து ரூபாய் கொடுத்து எல்லா பூவையும் வாங்கிட்டேன். எனக்கு பேசணும்னு ஆசை. ஆனா தைரியம் வரல. அவளும் காசு வாங்கினப்புறமும் அப்படியே கொஞ்ச நேரம் நின்னுட்டுத்தான் போனாள். ஏதாவது சொல்ல விரும்பினாளோன்னு கூட எனக்குப்பட்டுது!”

”அதுக்கு அடுத்த வாரம் என்னாச்சு? பாத்தியா? பேசினயா?”

”இல்லியே, ஒரு மாசம் காலேஜு லீவு. ஜூலை மாசம் திறந்தப்புறம் முதல் சனிக்கிழமை கோடை ரோடு ஸ்டேஷன் வரும்போது எனக்கு அவ்வளவு படபடப்பு. ஆனா அவ வரலைடா!”

”ஓ!”

”அன்னிக்கு மட்டும் இல்லை. அதுக்கு அப்புறம் பல மாசம் கோடை ரோடுல அவளைப்பார்க்கவே இல்லை.”

”அதோட விட்டுட்டியா?”

”ரெண்டு மாசம் பொறுத்துப்பார்த்துட்டு ஒரு சனிக்கிழமை கோடை ரோடுல இறங்கிட்டேன். பிளாட்ஃபாரத்துல நடையா நடந்து பார்த்தேன். அவ இல்லை. அங்க இருந்த டீ கடை ஆள் கிட்ட விஜாரிச்சும் பார்த்தேன். அவனுக்கு அந்த மாதிரி ஒரு பொண்ணைப்பத்தின நினைவே இல்லை!”

”அப்புறம்?”

”அப்புறமென்ன? அடுத்த வருஷம் எனக்கு சென்னையில லெக்சரர் வேலை கிடைச்சுது. நாம் அப்பதானே சென்னையில மீட் பண்ணினோம்! அப்புறம்தான் உனக்குத்தெரியுமே!”

”என்னடா இது? அந்தப்பொண்ண மறந்துட்டியா? என்ன ஆயிருக்கும் அவளுக்குன்னு கண்டு பிடிக்கத்தோணவே இல்லியா ஒனக்கு?”

”இல்லைடா! அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம். இல்ல ஏதானும் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இல்ல அவளோட வயசான தாய் மாமனுக்கு ரெண்டாம் தாரமா போயிருக்கலாம். எத்தனயோ சாத்தியங்கள் இருக்கே!”

“எல்லாம் உன்னோட ஊகங்கள் தானே! நெஜம் எதுன்னு தெரிஞ்சுக்காம இருந்துட்டியே?”

”எதுக்கு தெரிஞ்சுக்கணும்? சொல்லு, எதுக்கு? இப்ப அது தெரியாமயே எனக்குள்ள ஒரு ரகசிய சந்தோஷமும் பிரத்தியோக வலியும் இருக்கே அது போயிருக்குமே! சில அனுபவங்கள்லாம் முடியவே கூடாதுடா.அப்படியே உறைஞ்சுடணும். மனசுக்குள்ள அந்த அனுபவம் ஒரு பாதியில நின்ன தொடர்கதை மாதிரி சின்ன ஏமாற்றத்தோடவே இருக்கணும். வாழ்க்கையில எல்லா கேள்விகளுக்கும் விடை கெடச்சுடக்கூடாதுடா! சுவாரஸ்யம் குறைஞ்சு போய்டும்!”

“எல்லாம் சரி ராகவா! ஒரே கேள்விக்கு பதில் சொல்லு?”

”கேளு!”

“நீ ஏன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை?”

முடிந்தது

No comments:

Post a Comment