Friday, 16 March 2018

பெயரில்லாத கதை

அந்தப்பொம்மை ஒருக்களித்துப்படுத்துக்கிடந்தது. கைகளை என்னமோ ராயசமாக மடக்கி ஒரு சிறிய கூட்டத்தில் முக்கியப்பிரமுகர் போல தோள்களை உயர்த்தி கொஞ்சம் ”இங்கே நாந்தான் தலைவி” என்கிற ஹோதா. கொட்டைக்கண்கள். அதில் தெரியும் லேசான குறும்பு. ரொம்ப முக்கியமானது அந்த ஓரவாய் சிரிப்பு. அது முழு சிரிப்பு இல்லை. புன்னகையும் இல்லை. ஆனால் சிரிப்பு. வாயின் கடைசி ஓரத்தில் ஒரு மைக்ரோ செண்டிமீட்டர் மட்டுமெ விரிந்த சிரிப்பு போல ஒன்று. அதில் எத்தனை அலக்ஷ்யம்!
சோபாவில் சாய்ந்த நிலையில் அமர்த்தப்பட்டிருந்த அந்த பொம்மையை வீடு மற்றும் ஆஃபீசுக்கு சொந்தக்காரியான ஷோபா, தான் அங்கே வைக்கவில்லை என்கிறாள்.
ஷோபாவின் உதவியாளி வினோ “எப்படி இங்கே வந்துதுன்னு எனக்கும் தெரியவில்லை” என்று சாதிக்கிறாள்.
இருவருக்குமே அந்தபொம்மையை சுத்தமாகப் ்பிடிக்கவில்லை!
“ஷோபா! உங்களுக்கே தெரியாதா இந்த பொம்மை எப்படி இங்க வந்துதுன்னு?”
“யோசிச்சுப்பார்த்தால் நினைவே வரல வினோ”!
“சரி, அத விடலாம். ஷோபா! இப்போ அனுசூயா வர்ரேன்னிருக்காங்க”
“என்னது அனுசூயாவா? நாளைக்குதான் ட்யூ டேட்”
“அதென்னமோ தெரியாது. கொஞ்சம் முன்னாடி போன் பண்ணி இன்னும்அரை மணில வருவேன். மாடல் எனக்கு பாக்கணும்னா!”
“இன்னும் ரெடியாகவே இல்லையே வினோ. நாளைக்குதானெ அவ வரணும்?’
“அனுசூயா பத்தி தெரியாதா உங்களுக்கு? புடிச்ச முயலுக்கு ஆறே கால்னா ஆறு கால்தான்! என்ன பண்ணறது, புருஷன்காரன் ஏடிவி க்ரூப்போட சேர்மனாச்சே! அவாளோட வசந்த மாளிகைக்குன்னா நாம இண்டீரியர் டெகோரேஷன் பண்ணப்போறோம். மாடிலேர்ந்து குதின்னாலும் குதிக்கணும்”!
”சரி சரி, நீ போய் நம்ம கேர்ள்ஸ் கிட்ட அந்த வீட்டு மாடலை எதையாவது தேத்தி ரெடி பண்ணச்சொல்லு. நா ரூம சரி பண்ணறேன்”.
”அடச்சே! இது வேற!”
ஷோபா அந்த பொம்மையை எடுத்து அலமாரிக்கு மேலே எறிய, அது ”தொபக்”கென்று போய் விழுந்த வாக்கில் அலமாரியின் கதவுக்கு மேல் வாகாக சாய்ந்து நின்றது.
அந்தப்புன்னகை அப்படியே நக்கல்!
“ஷோபி டார்லிங்! என்கிற குரலோடு அரை கிலோ பர்ஃப்யூம் மணத்துடன் அனுசூயா உள்ளே வந்தாள்.
“வாங்க மேடம்”
அவள் கையில் அவளின் பாதி பர்ஃப்யூம் அணிந்த அவளின் பிகினீஸ் பூனை.
”ரூபி! சமத்தா இருக்கணூம்.“ ஷோபி! என் வீட்டு மாடல் எந்த அளவுக்கு ரெடி?’
”இதோ கொண்டு வரச்சொல்றேன். காஃபி சாப்பிடறீங்களா?”
“வாட் காஃபியா? அலறினாள்.
”யூ நோ சம்திங்? ப்ரேசிலேர்ந்து ரங்கு ஃப்ரெஷ்லி க்ரவுண்ட் காஃபி வாங்கிண்டு வந்திருக்கு. ஒரு த்ரிப்சம் தொடலை இதுவரைக்கும்”
“வேற கூல் ட்ரிங்க் ஏதானும்..?”
”ஒண்ணும் வேண்டாம் ஷோபா டார்லிங்! சீக்கிரம் கொண்டு வா. கீழெ ரங்கு கார்ல வெய்ட் பண்ணிண்டு இருக்கார். பத்து நிமிஷத்துக்கு மேல பொறுமை கிடையாது”. எல்லாத்துலயும் அவசரம் ரங்குவுக்கு, ஒண்ணே ஒண்ணுத்தத்தவிர” என்று ஆபாசமாக சிரித்தாள்.
ஷோபா பல்லைக்கடித்துக்கொண்டு, ”இதோ! வினோ! கொண்டு வரியா?”
இப்பொது அந்த ரூபி என்னும் பிகினீஸ் பூனை சோபாவில் ஏறி, ஜன்னல் கதவில் தொத்தி அலமாரியின் மேல் உள்ள அந்த பொம்மையை பார்த்து ”மியாவ்” என்றது.
அடுத்த பத்து நிமிடத்தில் மாடலில் நூற்றிப்பதினாறு மாற்றங்கள் சொல்லிவிட்டு “நாளன்னிக்கு வருவேன், ரெடியா இருக்கணும்” என்று புரப்பட்டாள்.
”ரூபி” என்று ஒரு க்ரீச்.
ரூபி பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தது. பொம்மையின் பார்வை இப்பொது பூனையின் பக்கமாக இருப்பதுபோல தோன்றியது. இப்போது என்னமோ அந்தப்புன்னகயில் நக்கல் தனத்தைக்காணோம்.
ஒருவேளை ப்ரமையா?
கொஞ்சம் கருணையோடு ரூபியைப்பார்ப்பது போல தோற்றம். ரூபியும் வாத்சல்யத்தோடு பொம்மையை பார்த்துக்கொண்டிருந்தது. ரூபியின் மில்லிமீட்டர் மூச்சு கூட கேட்டது.
”ரூபிக்குட்டி” என்று மேலே பார்த்த அனுஸூயா மறுபடி ஒரு எட்டு டெசிபல் க்ரீச்!
“வாட் ஹேவ் யூ காட் ஹியர்”?
”அது ஏதோ பொம்மை மேடம்”
”சீ! நன்னாவே இல்ல. முகத்துல என்ன கேலி பாரு! என்னை பாத்து பண்ணறாமாதிரி இருக்கு. இது நெஜம்மா இல்ல பொம்மையா?”
”ஐய்யோ! வெறும் பொம்மைதான் மேடம்”
”எனக்கு பிடிக்கவேயில்லை! தூக்கி எறி! திமிறப்பாரு”
கீழே குதித்த ரூபியை எடுத்துக்கொண்டு “அடுத்த முறை நா வரும்போது அந்த பொம்மை இங்க இருக்கக்கூடாது”
ரூபி திரும்பி திரும்பி பார்த்து மெல்லிய மியாவ்.
போய்ச்சேர்ந்தாள்.
”ஷோபா! மாடலில போன தரம் சொன்னதை இந்த தரம் மாத்திடறாள். இந்த ரேஞ்சில் போனால் என்னிக்கு அவள திருப்திப்படுத்தறது?”
”வினோ! இந்த பிஸாத்து வேலைக்கு மூணு லட்சம் தாளிக்கப்போறோம், கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்”
”வினோ! அப்பறம், என்ன பண்ணறது அந்த பொம்மையை?’
”கெடக்கட்டும் ஷோபா. இப்போ டைம் ஆயிடுத்து, நாளைக்கு எடுத்து போட்டுடலாம்”
நேற்றைய கவலைகள், ஆசாபாசங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லவற்றையும் அடித்துப்போட்டுவிட்ட அடுத்த நாள் காலை.
ஷோபா வரும்பொதே ரகளையாக இருந்தது. வினோவுக்கும் மற்ற பெண்டுகளுக்கும் ஒரே வார்த்தையாடல். கூடவே வேலைக்காரி அழுக்குத்தண்ணீர் சொட்டும் நீண்ட ப்ரஷ்ஷுடன்.
“த பாரும்மா! நா இனிமே அந்த ரூம்புக்குள்ற போய் பெருக்கி துடைக்க மாட்டேன்”
“என்ன ரமேலா! இப்படி பிடிவாதம் பிடிக்கற? அந்த பொம்ம ஒன்னை என்ன பண்ணித்து?”
”நீ போய் பாரு! அது சோபாவுல குந்திக்குனு இருக்கற ஜோரை?
ஷோபாவும் வினோவும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு, கோரஸ்ஸாக “ என்னது சோபாவுலயா இருக்கு அந்த பொம்மை?
”இன்னா பார்வை பாக்குது! பொம்மைக்குக்கூட என்னப்பார்த்தா எளகாரமா?
”சோபாவுலயா?
“பின்னில்லாதிக்கி? நா என்ன பொய்யா சொல்றேன், நீயே போய்ப்பாரு. வினோம்மா! அன்னிக்கு நான் ஒன்னோட சண்ட பிடிச்சிச்சேன்னு நீதான் என்ன நக்கல் பண்றதுக்காக பாத்து பாத்து வாங்கியாந்தியா அந்த பொம்மையை?”
பட படவென மாடியேறி ரூமில் பார்த்தால் பொம்மை நேற்று போலவே சோபாவில் ராயசமாக சாய்ந்து கொண்டு நக்கலாக சிரித்துக்கொண்டு இருந்தது.
”வினோ! நேத்திக்கு அப்படியே சாத்திண்டு போய்ட்டொம் இல்ல? அப்போ அது அலமாரி மேலதானே இருந்தது. இப்ப சோபாவுல எப்படி.?”
”நானும் உங்களோட வந்துட்டேனே! யேய்! பொண்ணூங்களா! நீங்க யாராவது அந்த பொம்மையை எடுத்து வெச்சீங்களா?”
மதுரா, ப்யூலா மற்றூம் ராஜி என்னும் இளம் தேவதைகளை மற்றொரு சந்தர்ப்பமாக இருந்தால் வர்ணிக்கலாம். ஆனால் இப்போது இந்தகதையில் வேண்டாம்.
“நாங்கயாரும் மாடிக்கே வரலயே மேடம்”
பூட்டியது பூட்டியபடி கிடந்த அறையில் அந்தப்பொம்மை மறுபடி சோபாவில் ராயசமாக அமர்ந்துகொண்டு அதே நக்கல் சிரிப்பை காட்டிக்கொண்டு இருந்தது
ஷோபாவுக்கும் வினோவுக்கும் லேசாக பய வேர்வை. அட்ரினாலினின் எக்ஸ்ட்ரா சுரப்பு. ஈஸிஜி எடுத்தால் ஆஞ்ஜியொக்ராம் பண்ணச்சொல்லும் பல்ஸ் எகிறல்.
“வினோ! என்ன இது, ஒனக்கு புரியுதா?”
“இல்ல ஷோபா. ஒரு வேளை காத்தடிச்சு இங்க வந்து விழுந்திட்ருக்குமோ?”
“க்ரெக்டா சோபாவுல முன்ன வெச்சிருந்தா மாதிரியே அப்படியேவா?”
.
“இல்லை, ஷோபா…”
”வினோ பயமா இருக்கு எனக்கு!”
“ஷோபா ஆஃப்டர் ஆல் இது ஒரு பொம்மை”
”அதோட முகத்தைப்பாரேன்!”
இப்போது நக்கல் கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது.
”என்னமோ கேட்கறாமாதிரி படரது எனக்கு ஷோபா!”
பொம்மை சலனமே இல்லாமல் அதே சாய்மானத்தில். புன்னகையில் ஒரு கெஞ்சல்.
“வினோ! லெட் அஸ் நாட் பானிக். நீ நல்லா பாரு. நான் இந்த பொம்மையை எடுத்து மறுபடி ஜன்னலுக்கு மேலெ பாரப்பெட் சுவற்றில் வைக்கிறேன். வா, கதவைச்சாத்திண்டு நாம கீழ போய் வெலை செய்யலாம். இனி நாளைக்கு பாக்கலாம்”
மறு நாள் காலை ஷோபா வந்த போது அமைதி. வினோ, மதுரா, ப்யூலா மற்றூம்.ராஜி பேயறைந்தார்போல் நின்று கொண்டிருக்க வேலைக்காரி ரமலா ஒரு அதிர்ச்சியில். மன்னிக்கவும், இப்பவும் சந்தர்ப்பம் சரியில்லை அவர்களை வர்ணிப்பதற்கு.
வினோ மாடியைக்காண்பித்தாள்.
ஷோபா கொஞ்சம் நடுக்கத்துடன் மேலே போய் கதவு திறந்து பார்த்தாள்.
சோபா காலியாக இருந்தது. “அப்பாடா” என்று ஜன்னலைப்பார்த்தபோது, அங்கும் அந்த பொம்மை இல்லை. ஆனால் கீழே........
ஷோபா வழக்கமாக உட்காரும் மேஜைக்கு முன் நாற்காலியில் ஏதோ மும்முரமாக படிப்பது போன்ற பாவனையில் அந்த பொம்மை. அதன் முன் ஷோபா பேப்பரில் வரைந்த அனுசூயாவின் வீட்டு மாடலின் வரைபடம்.
படபடவென கீழெ இறங்கி வந்தாள்.
”பொண்ணுங்களா! இது விளையாடற விஷயம் இல்லை. நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, இந்த ப்ராக்டிகல் ஜோக்கெல்லாம் இப்போ வேண்டாம். ப்ளீஸ், யாரானு பண்ணியிருந்தா சொல்லிடுங்க. இதோட விட்டுட்டு வேலையைக்கவனிக்கலாம்”
“ஷோபா மேம்! ப்ளீஸ்! நாங்க யாரும் பண்ணல. எங்களுக்கெ பயமா இருக்கு. நாளைக்கு வேலைக்கு வரணுமான்னு யோசிக்கறோம்!”
“அம்மா! சம்பள பாக்கிகூட வாணாம். நா இத்தோட நின்னுக்கறேன்”
ஷோபா ஒரு கணம் மூச்சை இழுத்து விட்டாள்.
”வினோ! நீ வா என்னோட”
விறு விறுவென்று மாடியேறினாள். மேஜைக்கருகே போய் அந்தப்பொம்மையை கண்கொட்டாமல் பார்த்தாள்.
வினோ கதவருகே தயங்கி நிற்க, அடுத்த கணம் ஷோபா சட்டென்று அந்த பொம்மையை எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்து விட்டாள்.
”ஷோபா!” வினோ வீறிட்டாள்.
“ஏன் அதப்போட்டீங்க. ஏதானும் சங்கடம் வந்துட்டா!?”
”ஷோபாவும் சற்றெ நடுங்கிய குரலில் “ஒழிந்தது சனியன். விடு வினோ”
”ஷோபா எனக்கு பயமா இருக்கு!”
இருவரும் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ப்ளாட்ஃபாரத்தில் அந்த பொம்மை எசகேடான கோணத்தில் கிடந்தது. இவர்கள் வீட்டையே உற்றுப்பார்ப்பது போல ஒரு பார்வை.
“ஷோபா! வா திருப்பி எடுத்துண்டு வந்துடலாம். ஏதாவது விபரீதம் வருமோன்னு எனக்கு பயமா இருக்கு.”
”வேண்டாம் வினோ. ஒழியட்டும்”
”இல்லை ஷோபா எடுத்துண்டு வந்துட்டு யோசிக்கலாம். எதுக்கு நாம ரிஸ்க் எடுக்கணும். இத கொண்டு போய் எதானும் கோவில்ல குடுத்துடலாம்.
”வினோ! நீ நம்பறியா இந்த விஷயதையெல்லாம்?’
“ஷோபா! அதெல்லாம் தெரியல. ஆனா பயமா இருக்கு” நீ தூக்கிப்போட்டது தப்போன்னு”
“வினோ என்ன சொல்றே? எனக்கு ஏதானும் கெடுதல் வந்துடுமா?”
”ஷோபா எதுக்கு வேண்டாத வேலை நமக்கு.”
”என்ன பண்ணலாம்?”
இருவரும் மாடியிலிருந்து இறங்கி, கதவைத்திறந்து வாசலுக்குப்போய் அந்த பொம்மை கிடந்த ப்ளாட்ஃபாரத்தை அடையும்போது ஒரு சின்னப்பெண் – அழுக்குப்பாவாடை, மேல் சட்டை, அறுந்த பித்தான், பரட்டைத்தலை - அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு எதிர்ப்பக்கம் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
“யேய் சின்னப்பொண்ணு! இங்க வா. அந்த பொம்மையைக்கொடு”
அந்தப்பெண் திரும்பிப்பார்த்து விட்டு தயங்கி அங்கேயே நின்றது.
”இந்தாம்மா! அது நல்ல பொம்மை இல்லை. குடுத்திடு. உனக்கு வேற வாங்கித்தரேன்”
“முடியாது, இந்த பொம்மைதான் வேணும்”
”சொன்னா கேளும்மா. அது நல்லது இல்ல. கொண்டா இந்தா காசு”
“உன் காசு எனக்கு வேணாம். இந்த பொம்மைதான் வேணும்
”இதோட பெரிய பொம்மை நான் வாங்கித்தரேன். இதக்கொடுத்துடு!” – கிட்டத்தட்ட கத்தினாள் ஷோபா.
”முடியாது முடியாது. வேணாம்னுதானே தூக்கிப்போட்டீங்க. இப்ப மட்டும் என்ன? அந்த பொம்மை என்ன கேட்டுது? கொஞ்ஜூண்டு அன்புதானே கேட்டுது. கொடுத்தீங்களா? பொம்மை எவ்வளவு அழுதிருக்கும்? எத்தனை மனஸு கஷ்டப்பட்டிருக்கும். தூக்கிப்போட்டுட்டு இப்போ ஓடி வந்து கேக்கறீங்களே? இனிமே இந்த பொம்மை என்னோடது. நா அதுக்கு என்னோட முழு அன்பையும் கொடுப்பேன். என்னொடவே வெச்சுப்பேன்.”
அந்தப்பெண் ட்ராஃபிக்கில் புகுந்து , எதிர் தெருவில் நுழைந்து கை பம்புக்குப்பின்னால் இருந்த பழக்கடையின் ஓரத்து சந்தில் திரும்பி மறைந்தே போனாள்.
“அவ போய்ட்டா ஷோபா”
“என்ன சொன்னா கேட்டியா வினோ! பொம்மை அன்புதானே கேட்டுதுன்னா!
ஆமாம் அன்புதானே! அப்படித்தான் இருக்கும் இல்லியா ஷோபா!
ஆழ்வார்ப்பெட்டையின் ட்ராஃபிக் நிறைந்த தெருவில் அந்த இரண்டு ஆர்க்கிடெக்ட் பெண்களும் லேசான கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் ்கொண்டிருந்த கணத்தில் இந்தப்பெயரில்லாத கதை முடிகிறது.

No comments:

Post a Comment