Friday, 30 March 2018

இன்றைய கதையரங்கம் (30 மார்ச், 2018)
வெத்தக்குழம்பும் சுட்ட அப்பளாமும்
“ நான் ரெடியா இருக்கேன்! எப்ப வரப்போறீங்க?”
“தோ இன்னும் அரை மணியில நம்ம கார்ல இருப்பேன்!”
“அப்பாடா! ஒரு வழியா உங்களக்கிளப்பியாச்சு! இன்னம் ரெண்டு நாளைக்கு ஒண்ணும் பேசப்படாது!”
“ஆஹா! நீ சொன்னா மறுப்பேது?”
“ம்க்கும்!”
கார் மெயின் ரோடு திரும்பி ராஜ் பவன் வருவதற்குள் மொபைலை எடுத்து பேச முற்பட்டார். வேதவல்லி அதைப்பிடுங்கிக்கொண்டாள்.
“இப்பத்தானே சொன்னேன்! பேசப்படாது! எனக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேள்!”
“ஓகே ஒகே! நீதான் பாஸ்!”
ரிலாக்ஸாகச்சாய்ந்து கொண்டு அமைதியானார். கார் செங்கல்பட்டைத்தாண்டும்போது “இங்கதான் ஒரு கிராமத்துல நான் ஸ்டூடண்ட்டா இருக்கும்போது..” என்று ஆரம்பித்தார்.
“நெறைய தரம் சொல்லியாச்சு! அந்தக்கிழவனும் அவன் ஊமைப்பெண்ணும்தானே!”
”ஓகே யூ வின்!”
மறுபடி அமைதியானார். வேதவல்லிக்கு அவரைப்பார்க்க பாவமாக இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டாள்.
“இந்த ரெண்டு நாள் அமைதி அவருக்குத்தேவை!”
வழியில் சிதம்பரத்தில் மேற்குத்தேரடி வீதியில் பலகாரம் டாட் காம் என்னும் ரெஸ்டாரண்ட்டில் தோசையும் காபியும் சாப்பிட்டார்கள்.
“இப்பல்லாம் என்ன! டேஸ்டே இல்ல பாரு! அப்ப மாயவரத்துல காளையாக்குடி….!”
“சொல்லியாச்சு! தோசைக்கு எள்ளுப்பொடியும் நல்லெண்ணையும்தானே!”
“சரி சரி, இன்னமே வாயைத்திறந்தேன்னா கேளு!”
வேதவல்லி சிரித்துக்கொண்டே அவர் கையைப்பற்றினதில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது.
வைத்தீஸ்வரன் கோவில் தாண்டினதும் அழகான கிராமங்கள் தென்பட, ஏஸியை அணைக்கச்சொல்லி, கார் கண்ணாடியைத்திறந்து வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல். நடு நடுவே சல சல சிற்றாறுகள், இல்லை சிற்றோடைகள். கோவிலுக்கு அருகிலேயெ தெரியும் காத்த வீரியன் சிலைகள். தெருவில் கொஞ்சம் நடமாட்டம். கூட்டமாய் ஆடுகளை ஓட்டிப்போகும் அந்த பெரிய முண்டாசு அணிந்த சிறுவன், சுகுணா என்ற பெயருடன் காரியரில் கட்டி வைத்த டப்பாவில் முட்டை வியாபரத்துக்கு சைக்கிளில் போகும் ஆசாமி, கையில் குடங்களுடன் ஒன்றிரண்டு விடலைப்பெண்கள், முணு முணுப்புடன் சில கிழவிகள். தூரத்தில் வரிசையாக ஊருக்குக்காவல் போல பனை மரங்கள்.
”கிராமம்னா நன்னாத்தான் இருக்கு!”
“அதுக்குத்தான்ரெண்டு வருஷமா நானும் என் தம்பியும் உங்களக்கெஞ்சிக்கூப்டுண்டு இருந்தோம்!”
“ஆமா இப்ப என்ன உன் தம்பிக்கு திடீர்னு தெய்வ பக்தி! நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம்னு அமர்க்களம் பண்றானே?”
”அவனோட விவசாய நெலத்துக்கு அவார்டு கொடுத்தாளே போன மாசம்! அதுக்கு பிரீதியா ஏதோ தெய்வ காரியம் பண்றான்!”
“யாரு அவனா? சும்மா இது ஒரு சாக்கு! தன்னோட பந்தாவைக்காட்டிக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கறான்! மந்திரி வர்ராரோன்னோ?”
“ஆமா உங்களுக்கு அவனக்கண்டா எப்பவுமே கரிப்புதான்! மந்திரி வராருன்னா அவனோட செல்வாக்கு அப்படி! எவ்வளவு நெலம்! அத்தனையிலும் இப்பவும் பயிர் பண்ணி, எரநூறு பேருக்கு மேல வேல கொடுத்து, ரைஸ் மில்லுல வேலைன்னு அவனால எத்தன பேர் பொழைக்கிறா!”
“சரி இன்னைக்கு என்ன புரோகிராம்?”
“புரோகிராம் என்ன புரோகிராம்! நாம போய்ச்சேர நாலாயிடும்! டிஃபன் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டா அஞ்சரைக்கு திருநாள்ளாறுல அபிஷேகம் பண்றான்! முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூக்கம். நாளைக்கு காலம்பர ஆறு மணிக்கே ஆத்துல பூஜை ஹோமமெல்லாம் ஆரம்பிச்சுடறாளாம்.!”
”ஆமா உன்னோட சித்தி பொண்ணு ஒருத்தி இங்க எங்கயோதான் இருப்பாளே?”
“ஆமா சுகந்திதானே! இங்கதான் செம்பனார்கோவில்ல இருக்கா!”
”வருவாளா? அவ ஹஸ்பண்ட் கூட சாஸ்திரிகள்ம்பியே?”
”தெரியல! என் தம்பிக்கும் அவாளுக்கும் ஒத்துப்போகாது!”
”நெனச்சேன்! உன் தம்பிக்கு ஒத்துப்போணும்னா அவாளுக்கு சொத்து இருக்கணூமே! இல்லேன்னா இவன் கிட்டத்துல சேர்க்க மாட்டானே!”
”என்ன பண்றது, பண்ணையாராவே வளர்ந்துட்டான்! அந்த மிதப்பு அப்படியே ஒட்டினுடுத்து! நாம போய் அவாள பாத்துட்டு வந்துடலாம்!
“நிச்சயமா! நானும் வரேன்!”
திருநள்ளாறு போய் அபிஷேகம் ஆராதனையெல்லாம் பார்த்து வீடு வந்தபோது சின்ன உறவுக்கார கூட்டம். கழுத்து காதுவென்று நகைகள் அணிந்த செயலான உறவுக்காரகள் மட்டும்!
“வா வேதவல்லி! இந்த தரம் எப்படியோ ஆத்துக்காரர அழைச்சிண்டு வந்துட்டே! பேஷ்!”
”ஆமா சுகந்திய பாத்தியோ?”
”எப்படி இருக்கா மாமி?
”அவ ஆம்டையானுக்குதான் உடம்பு சரியில்லைன்னா. நானுமே காதால கேட்டதுதான்! அவரும் இப்ப வைதீகத்துக்கெல்லாம் வர்ரதில்லை!”
”அக்கா! அத்திம்பேர சாப்பிட வரச்சொல்லலாம்! உங்க ரெண்டு பேருக்கும் மாடில ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கேன், ஏஸிய ஆன் பண்ணி வெக்கச்சொல்லிட்டேன். சீக்கிரமா போய்த்தூங்கிடுங்கோ! காலம்பர சுருக்க எழுந்திருக்கணூமே!”
”அப்புறம் அத்திம்பேர்…..?”
“என்ன சொல்லு?”
“இங்க என்னோட ஃப்ரெண்ட்! கடலங்குடி மிராஸ்தார்!. பெரிய எடம்! மயிலாடுதுறை எம் எல்லேக்கு ரொம்ப ஆப்தர். அவர்ட்ட எனக்கு சில சகாயம் ஆக வேண்டியிருக்கு! உடம்பு சரியில்லாம அவஸ்தைப்படறார். நாளைக்கு வருவர். கொஞ்சம் நீங்க அவர செக் பண்ணனும்! மாடில ஏஸி ரூம்லதான் அவர் உக்காத்தி வெக்கப்போறேன். நீங்களே இங்க வந்தபோது அவரப்பார்த்தேள்னா அவருக்குப்பெருமை. எனக்கும் மரியாதையா இருக்கும்!”
“த பாரு நீ என் மச்சினந்தான்! அதுக்காக உன்னோட பிஸினஸுக்காக என் தொழில யூஸ் பண்ண முடியாது. நா இங்க லீவுல வந்திருக்கேன். அதனால ..சாரி! அவர மெட்ராஸுக்கு வரச்சொல்லு. பேஷாப்பாக்கறேன். இப்ப மறுபடி சாரி!
“என்னக்கா இப்படி சொல்றார் அத்திம்பேர்!”
“விடுடா! அவரப்பத்தி இத்தன வருஷத்துல ஒனக்குத்தெரியாதா?”
காலை விடிந்தபோது முன்பின் கேட்டே அறியாத பட்சிகள் சப்தித்துக்கொண்டிருந்தன. பல் தேய்த்துக்குளித்தார். டிஃபன் சாப்பிட்டார். கீழே வேத மந்திரங்கள் தொடங்கின ஓசை கேட்டது.
“அத்திம்பேர்! நீங்க பாட்டுக்கு மாடியில ரெஸ்டா இருங்கோ! பதினோரு மணிக்கெல்லாம் எல போட்டுடலாம்னு சாஸ்திரிகள் சொல்லியிருக்கார். வேணும்னா நம்ம ஊர் கோவிலுக்குப்போட்டு வரேளா?”
“இல்ல வாண்டாம்! செம்பனார்கோவிலுக்கு ஒரு நடை போய்ட்டு வரேன்!”
“ஆரு, அந்த சாஸ்திரிகளாத்துக்கா?”
“உன் ஒண்ணு விட்ட தங்கைன்னு சொல்ல மாட்டியா?”
“அடப்போங்கோ அத்திம்பேர்! அவாள்ளாம் நம்ம ஸ்டேட்டஸுக்கு ஒத்து வருவாளா? இங்க வந்தாள்னா, அதான் பாத்தேளே, இத்தன பேரோட நகை நட்டெல்லாம் பாத்து பிரமிச்சுண்டு அலமந்து நிப்போ! அசட்டு பிசட்டுன்னு பேசுவோ! எனக்கு அதெல்லாம் சரிப்படாது அத்திம்பேர்!”
“நான் சாதாரண ஆசாமிதானேப்பா! நா போய் பார்த்துட்டு வந்துர்ரேன்! வேதம்! நீ வரயா?”
“அத்திம்பேர்! ப்ளீஸ்! அக்காவையாவது இஞ்ச வெச்சுக்கறேனே! அவளையும் இழுத்துண்டு போணுமா அந்தாத்துக்கெல்லாம்?”
”சரி சரி! வேதம் நா போய்ட்டு ஒன்னவர்ல வந்துடறேன்!”
”கன்னியப்பா! ஒனக்கு வழி தெரியுமா?”
“இங்கல்லாம் அவ்வளவு பளக்கமில்லீங்கய்யா!”
“அத்திம்பேர்! நம்ம மாடசாமியைக்கூட்டிண்டு போங்கோ! டேய்! மாடசாமி! அய்யாவோட செம்பனார்கோவிலுக்கு போய்ட்டு கூட்டிண்டு வா! சுருக்க வரணும், என்னடா?”
எழுபதுக்கு மேல் வயதான மாடசாமி தன்னைவிட இருவது வயது குறைந்த மிராஸ்தார் ”டா” போட்டுப்பேசியதை பொருட்படுத்தாமல் கிளம்பினார்.
“சுகந்தி! வாசல்ல கார் நிக்கறதே! நம்மாத்துக்கா? யார்னு போய்ப்பாரு?”
”தோ போறேம்மா! இவருக்கு கஞ்சி கொடுத்துட்டு வந்தேன்!”
அடேடே! வேதத்தண்ணாவா! வாங்கோ வாங்கோ! வேதவல்லி வரலியா? மிராஸ்தார் ஆத்துய்க்கு வந்தேளா? ஹோமம்னு கேள்விப்பட்டேன்!”
“ஆமாமா! நீ எப்படி இருக்கே? அவர் சௌக்கியமா? உடம்பு சரியில்லைன்னு சொன்னாளே!”
விசும்பல்.
“ஒரு மாசமா போட்டுப்படுத்தறதுண்ணா! வயத்த வலி வலின்னு துடிக்கறார்! மாயவரம் டாக்டர்ட்ட காட்டினேன். வயத்துல அல்சர்ங்கறார். உப்பு காரமில்லாம சாப்பிடச்சொன்னார்! ஆச்சு இதோ ஒரு மாசத்துக்கு மேல! ஒரு மருந்தும் கேக்கலேண்ணா!”
“ஏம்மா எனக்கு ஒரு ஃபோன் பண்ணப்படாது? என்ன பொண்ணு நீ?” சரி வா! நான் பக்காறேன்!”
”வாங்கோ சார்!”
“ஏந்துக்க வாண்டாம்! அப்படியே ஈஸியா இருங்கோ! என்ன பண்றது! யோஜனை பண்ணி சரியாச்சொல்லுங்கோ!”
“போன மாசம் ஒரு நா தெவசத்துக்குப்போய் சாப்டுட்டு வந்தேன்! அன்னிலேர்ந்தே வயத்துல ஒரு அசக்தம். வலின்னு சொல்ல முடியாது. வெளிக்கி சரியா போகல. ரெண்டு நா பாத்துட்டு மாயரம் டாக்டர்ட்ட காட்டினேன். அவரும் ஏதோ மருந்து குடுத்தார்”.
“வலி குறைஞ்சுதா?
“இல்லை! ஜாஸ்தியாச்சு! சில சமயம் பின் பக்கத்துலேர்ந்து ரத்தம்! சில நாள் பேதி! சில சமயம் ரெண்டு மூணு நாளைக்கி ஒண்ணுமே போகவே போகாது! வெறுமனே குசுவா........கேஸாப்போகும்!”
மறுபடி டாக்டர்ட்ட போலியா?”
”இல்ல! அம்மா கை மருந்தா ஏதோவெல்லாம் குடுத்தா. ஒண்ணொண்ணா பார்த்துண்டு இருக்கேன்!”
சுகந்தி! இவருக்கு வெயிட் குறைஞ்சிருக்கா?”
“ஆமாண்ணா! ஆள் பாதியாய்ப்போயிட்டார்!”
”சரி இவர இன்னமே இங்க வெச்சு ட்ரீட்மெண்ட் பண்ணினா போறாது. இன்னிக்கே என்னோட மெட்ராசுக்கு கிளம்புங்கோ!”
“அண்ணா என்ன சொல்றேள்? ஏதாவது அபாயமா…?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏற்கனவே நாள் கடத்திட்டேளே! அதான்!”

அண்ணா….?”
“நம்மாத்துல தங்கிக்கலாம். அம்மாவையும் கூப்டுக்கோ! சட்டுனு பொட்டி எடுத்துண்டு கெளம்புங்கோ! என் கார்லயே போய்டலாம். நா வேதத்துக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன்!”
“மாடசாமி! நீங்க கெளம்புங்க! எனக்கு லேட்டாவும்! இந்தாங்க பஸ்ஸுக்கு காசு. போறப்போ காபி சாப்ட்டுட்டு போங்க!”
“அய்யா கோவிச்சுக்குவாரே…?”
“நா இப்ப ஃபோன்ல சொல்லிர்ரேன்! நீங்க கவலைப்படாம போங்க!”
“வேதம்! நாந்தான்!”
“என்ன ஆச்சு?”
நான் சொல்றத மூழுசாக்கேளு!”
“ம், சொல்லுங்கோ!”
”………………………………………………..”
“அடப்பாவமே! அவாள அழச்சிண்டு உடனே நீங்க கெளம்புங்கோ! நான் மெட்ராசுக்கு ஃபோன் பண்ணி அலமேலுவ வரச்சொல்லிடறேன்! சமையக் காரியத்தெல்லாம் அவ பாத்துப்போ! நானுமே நாளைக்கி டிரெயின்ல கெளம்பி வந்துடறேன்!”
“ஒந்தம்பி..?”
“அவங்கெடக்கான்! நா சமாளிச்சுக்கறேன்!”
தாங்க் யூ வேதவல்லி! ஐ லவ் யூ!”
“அய்யே போறுமே! வழிஞ்சாறது! கெளம்புங்கோ! கெளம்புங்கோ!”
”ப்யூலா? நம்ம ஆஸ்பத்திரியில ஸ்பெஷல் ரூம் ரெடி பண்ணு! இன்னிக்கு ஈவினிங் நா வந்துருவேன்! அவினாஷக்கூப்பிட்டு கோலோனோஸ்கோபிக்கு தயார் பண்ணிக்கச்சொல்லு! கால் டாக்டர் நிர்மலா!”
”நிர்மலா ஹியர் புரொஃபசர்!”
”எஸ் நிர்மல்! கார்சினோ எம்ப்ரையோனிக் ஆண்டிஜென் டெஸ்ட் இருக்கா நம்மகிட்ட? ஓ குட்! அத ரெடி பண்ணு!”
”எஸ் புரொஃபசர்!”
”எனக்கு கான்ஸர் ஸ்டேஜிங் டெஸ்ட் பண்ணனும் ஒரு பேஷண்ட்டுக்கு! ஐ சஸ்பெக்ட் இன்வேஷன் இண்ட்டு லிம்ஃப் நோட்ஸ். ஆஸ்க் ப்யூலா டு கெட் தி ஆபரேஷன் தியேட்டர். மினிமல் இன்வேஸிவ் சர்ஜரி டுமாரோ! ஓகே?”
“எஸ் டாக்டர்! வி வில் பி ரெடி ஃபார் யூ!”
“அண்ணா! என்னென்னமோ சொல்றேளே! இவர் பொழப்பாரா?”
“சேச்சே! சுகந்தி! நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்! அப்படி உயிர் போக விட்ருவோமா? எனக்கு இப்ப பசி உயிர் போறது! இன்னிக்கு என்ன சமையல்?”
“வெத்தக்குழம்பு சுட்ட அப்பளாம்! அண்ணா! நீங்க மிராஸ்தார் ஆத்துல ஹோம்ம் முடிஞ்சு சாப்பிடணும்னு…?”
“என்னது வெத்தக்குழம்பு சுட்ட அப்பளாமா? அதுக்கு என் வலது கையையே தருவேனே! நீ என்ன பண்றே, முதல்ல அதப்போடற. அப்புறம், அரை மணியில சாப்ட்டுட்டு எல்லோருமா மெட்ராசுக்கு கெளம்பறோம்!
சுண்டைக்காய் வெத்தக்குழம்பை வெக்கமில்லாமல் வழித்துச்சாப்பிட்டுவிட்டுத்தான் எழுந்தார் டாக்டர் வைகுண்டம்.

No comments:

Post a Comment