என்னமோ போன வாரக்கதையரங்கம் மீள் என்பதால் பலருக்கு அவ்வளவாக ருசிக்க வில்லை என்பது சோகையான லைக்கிலிருந்து தெரியவருகிறது.
எனவே அதை ஈடுகட்ட இன்னொரு கதை......
“ஓகே! ப்யூலா! அந்த பேஷண்ட் ராமசாமிய வரச்சொல்லு! கூட வந்திருக்கறது யாரு, அவன் ஒய்ஃபா?”
“எஸ் டாக்டர்!”
”வாப்பா ராமசாமி! உக்காரு! நீயும் உக்காரும்மா!”
வந்தவனுக்கு வயது நாற்பதுக்குக்கீழேதான். கண்கள் இருண்டு கிடந்தன. சோகையாக இருந்தான். முகத்தில் அவஸ்தையின் வலி மிச்சங்கள் தெரிந்த ஆயாசம். ஒல்லியாக இருந்தான். கொஞ்சம் சாதாரண பிளாட்ஃபார்ம் கடை சட்டை, பாண்ட்! கூட வந்த அவன் மனைவி வத்தக்காய்ச்சியாக இருந்தாள். நார்மலுக்குக் கீழான ஹிமாக்ளோபின் அளவு கண் சோர்வில் தெரிந்தது. சாதாரண புடவை, கசங்கின ப்ளவுஸ், கழுத்தில் மிக மெல்லிய சங்கிலி.
“வீடு எங்க உங்களுக்கு?”
“ராயப்பேட்டைங்க!”
“எங்க வேல பாக்கற?”
“துபாய்ல டிரைவரா இருக்கேன்!”
”என்னது துபாய்லயா?”
”ஆமா டாக்டர்!”
”ஏம்மா நீங்களும் துபாய்லயா இருக்கீங்க?”
”இல்லீங்க! இங்க இவங்க அண்ணன் அண்ணியோட இருக்கனுங்க!”
“வேலைக்கி போறீங்களா?
இல்லீங்க! வீட்டு வேல செய்யவே நேரம் சரியா இருக்குமுங்க. முதல்ல ஒரு டாக்டராண்ட எடுபிடி வேல செஞ்சேன்!”
“ஓ தட்ஸ் வெரி குட்! உங்க அண்ணன் என்ன செய்யறாரு?”
“அவருக்கு தனியா வேல ஒண்ணுமில்லங்க! நா அனுப்பற பணத்த வட்டிக்கு விட்டு பாத்துக்கறாருங்க!”
அவினாஷ் உள்ளே வந்தான்.
அவினாஷ் உள்ளே வந்தான்.
“அவினாஷ்! ரிப்போர்ட் பார்த்தியா?”
”பாத்தாச்சு புரொஃபசர்! நத்திங் மேஜர்………!”
“ஓகே அவினாஷ்! நான் பாத்துக்கறேன்! த பாருங்க ராமசாமி! நாளைக்கு காலையில உங்க அண்ணன் அண்ணியோட என்ன வந்து பாருங்க! உங்க உடம்பு பத்தி குடும்பத்துல பேசணும். அப்புறம்தான் ட்ரீட்மெண்ட்! என்ன?”
“ஏங்க இவருக்கு ஆபத்துங்களா? இவருக்கு ஒண்ணுன்னா நா நாதியத்துப்போய்டுவங்க!”
“த சும்மாரு! சரிங்க! நாளைக்கி அண்ணாத்தையோட வர்ரனுங்க!”
அவன் கையைப்பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியேறியவர்களைப்பர்த்தார்.
“புரொஃபசர்! நத்திங் மேஜர்! ஜஸ்ட் பெப்டிக் அல்சர்! அவ்வளவுதான்!”
“ஐ நோ அவினாஷ்! ட்ரீட்மெண்ட் ராமசாமிக்கு இல்லை. அவன் குடும்பத்துக்கு!”
அடுத்த நாள் ப்யூலாவுடன் தன் அறைக்குள் நுழைந்த ஆசாமி ராமசமியின் கண்களோடு அந்த மூக்கின் நுனியும் சேர்த்து இருந்த காப்பியாக இருந்தான். உயர்தர சட்டை பாண்ட். கழுத்தில் தடித்த செயின். கையில் ப்ரேஸ்லெட் வளையக மாதிரி கனத்தது. உற்றுக்கவனித்ததில் டிஸ்ஸார்ட் வாட்ச்!
அவன் மனைவி அலட்சிய யுவதியா இருந்தாள். முகத்தில் சீராக அப்பிய பவுடர். நெற்றியில் வட்டப்பொட்டுக்கு அடியில் ஒரு சந்திர வளையம், அதனடியில் பளபளக்கும் சில்வர் புள்ளிகள். கழுத்தில் தடித்த ரெட்டை வடம். உடலோடு ஒட்டிய ஷிஃபானில் அரேபியா மிளிர்ந்தது. உயர்தர செண்ட் வாசனை கூடவே வந்தது.
“வாங்க! நீங்கதான் ராமசாமியோட அண்ணன் அண்ணியா? வாங்க ராமசாமி! நீங்களும் உக்காருங்க!”
“வரச்சொன்னீங்களாமே!”
குரலில் லேசான அலட்சியமும் அலுப்பின் சாயல்.
”ஆமாம்! உங்க தம்பிக்கு உடம்பு மோசமா இருக்கு. அவரால இன்னமே வேலைக்கெல்லாம் போக முடியாது. இத்தனை வருஷம் அவர் சம்பாதிச்சுப்போட்டாருல்ல, இனிமே நீங்கதான் அவரப்பாத்துக்கணும். வேளா வேளைக்கி சத்தான சாப்பாடு சாப்பிடணூம். இன்னம் ஆறு மாசத்துக்கு முழு ரெஸ்ட் தேவைப்படும், என்ன செய்வீங்களா? அப்பத்தான் அவர் பிழைப்பார்!”
மனைவி இப்போது மளுக்கென்று அழுதாள். அண்ணன் முகத்தில் அதிர்ச்சி. அண்ணி இன்னும் அலட்சியம் விலகாமல் நெற்றிப்புருவத்தை மட்டும் சுருக்கினாள்.
” சரிங்க! நாங்க பாத்துக்கறம்! இப்ப எதுனா மருந்து குடுத்துடுங்க!”
“அப்படியெல்லாம் சட்டுனு குடுத்துட முடியாது! நாளன்னிக்கி அடுத்த நாள். அதான் வியாழக்கிழமை அழச்சிட்டு வாங்க! ஒண்ணும் கவலைப்படாதம்மா! அண்ணன் அண்ணி இருக்காங்க இல்ல? நல்லா பாத்துக்கிட்டா ரெண்டு வருஷத்துல சரியாய்டுவாரு!”
அண்ணனும் அண்ணியும் சடாரென விலக, ராமசாமியும் மனைவியும் தயங்கித்தயங்கி நடந்தார்கள்.
“ப்யூலா! கெட் மி டாக்டர் சுந்தர் ஃப்ரம் துபாய் அல் சாஹ்ரா ஹாஸ்பிடல்!”
வியாழனன்று ராமசாமியும் மனைவியும் மட்டும் வந்தார்கள். மனைவியி கண்களில் இரவு அழுத சாயல். ராமசாமி இன்னும் சோர்வாக இருந்தான்.
“ப்யூலா! ரெண்டு காபி சொல்லு! என்ன ராமசாமி! அண்ணன் வீட்டை விட்டுப்போய்ட்டாரா, இல்ல உங்கள தொரத்திட்டாரா?”
ராமசாமி ஆச்சரியத்தில் பார்க்க மனைவிதான் பேசினாள்
“எங்கள தெர்த்திட்டாருங்க! இவரு சம்பாரிச்சதல்லாம் போச்சு! இப்ப நாதியில்லாம நிக்கிறமுங்க!”
அடக்கமாட்டாமல் கேவினாள். ராமசாமியும் கண் கலங்கினான்.
அடக்கமாட்டாமல் கேவினாள். ராமசாமியும் கண் கலங்கினான்.
“ஒண்ணும் கவலைப்படவேண்டாம். உனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்ல!”
“என்ன டாக்டர்? ஒண்ணுமில்லையா?”
ஆமாப்பா! வெறும் பெப்டிக் அல்ஸர்தான்! ரெண்டு மாசம் ஜாக்கிரதையா சாப்பிட்டு வந்தீன்னா சரியாய்டும். நான் மருந்து தரேன்!”
“அப்ப அன்னிக்கி..?”
“அட போய்யா! இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே! அது சரி, துபாய் வேலய விட்டுட்டியா இல்ல மறுபடி போனா வேல குடுப்பாங்களா?”
“உடம்புக்கு முடியலைன்னு விட்டுடேனுங்க!”
”சரி பாஸ்போர்ட்டெல்லாம் எடுத்து வெச்சிருக்கியா?”
”அதெல்லாம் கவனமா எடுத்தாந்துட்டேங்க!”
“அதக்குடு! என் ஸ்டூடெண்ட் ஒர்த்தான் துபாய் ஆஸ்பத்திரில பெரிய டாக்டரா இருக்கான். அவங்க ஆஸ்பத்திரிக்கு டிரைவர் வேணுமாம். உன்ன அனுப்பறேன்னு சொல்லிட்டேன்! இன்னம் ரெண்டு வாரத்துல விசா டிக்கட்டெல்லாம் ஏற்பாடு பண்ணிடலாம்!”
“ரொம்ப நன்றிங்கய்யா!”
“த பாரும்மா! ஒரு வருஷம் கழிச்சு நீயும் துபாய் போக ஏற்பாடு பண்றேன்? சரியா?
”அய்யா! இவள எங்க விட்டுட்டு போவேனுங்க? ஆருமே இல்லியே?”
”அதெல்லாம் நா பாத்துக்கறேன்! ஏம்மா ஒரு வருஷத்துக்கப்றம்தான் நீ துபாய்க்கு போக முடியும். நர்ஸிங் கோர்ஸ் அனுப்பறேன், படிச்சு பாஸ்பண்ணு. அதே ஆஸ்பிட்டல்ல வேலைக்கு அரேஞ்ச் பண்றேன், என்ன?”
”அய்யா! அய்யா!”
“சரி இப்ப தங்க எடம் ஏதாவது இருக்கா?”
“அதுங்களா, நாங்க சமாளிச்சுக்குவங்க!”
”எப்படி சமாளிப்பீங்க? அதான் எல்லாத்தையும் ஏமாந்து நிக்கறீங்களே! ப்யூலா! வீட்டுக்கு லைன் போடு!”
“வேதவல்லி! ஹவ் ஆர் யூ?”
“இப்ப மணி பத்தாறது! எட்டு மணிக்குதானே வீட்லேர்ந்து போனீங்க! ரெண்டு மணி நேரத்துல என்ன ஹவ் ஆர் யூ? என்ன காரியம் ஆகணும் எங்கிட்ட?”
“யூ ஆர் ய டார்லிங் வேதம்! சரி, அவுட் ஹவுஸை க்ளீன் பண்ணி வெக்கச்சொன்னேனே?”
’ஆச்சு! இப்பதான் மாரி காசு வாங்கிண்டு போறான்!”
“ரெண்டு பேரையும் அனுப்பறேன்! அதான் நேத்தி ராத்திரி சொன்னேனே!”
“அனுப்புங்கோ! மாமிய ரெண்டு கைப்பிடி கூட சாதம் வெக்கச்சொல்லியிருந்தேன். கரமது, சாத்துமது எல்லாம் இருக்கு! வந்து சாப்பிடட்டும்! அப்புறமா நானே பேசிக்கறேன்!”
“ஓ வேதம்! யூ ஆர் என் ஏஞ்சல்!”
”போறும் போறும்! அனுப்புங்கோ!”
“ப்யூலா! சரவணன வரச்சொல்லு! இவா ரெண்டு பேரையும் எங்க வீட்ல மாமிகிட்ட அனுப்பிடு! இந்தா ரெண்டாயிரம் ரூவா. சரவணண்ட்ட குடுத்து இவாளூக்கு வேணுங்கற தட்டு முட்டு சாமானெல்லாம் வாங்கிக்கச்சொல்லு!” ராமசாமி! இந்தாம்மா! நீயும் கெளம்பும்மா!”
“டாக்டர்! எப்பேர்ப்பட்ட மனிசன் நீங்க! நாங்க எப்படி..?”
“ப்யூலா! என் டயத்த வேஸ்ட் பண்ணினா எனக்குப்பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா? டேக் தெம் அவே! அண்ட் நிர்மலாவ வரச்சொல்லு!நேத்து பெட் நம்பர் பதிநாலுக்கு இண்ட்ராமஸ்குலர் இஞ்செக்ஷன் போடணும்! இவ சப்க்யூடேனியஸா போட்டிருக்கா! இன்கார்ரிஜிபிள் ஐஸே!”
நிர்மலாவைக்காய்ச்சுவதற்குத்தயாரானார் டாக்டர் வைகுண்டம்!
No comments:
Post a Comment