Tuesday, 7 July 2026

 வசுந்தரா வின் முதல் கதை

ரவா கேஸரி


ப்ளேன் தரை தொட்டவுடன் வசுந்தராதான் முதலில் இறங்கினாள்.

பிஸினஸ் கிளாஸில் கூட்டமில்லை. சட்டென்று சின்ன லக்கேஜுடன் வெளியே வந்தபோது சென்னை பிராஞ்ச் உதவி மானேஜர் ராகவன் காத்திருந்தான்.

”வெல்கம் மேடம்!”

“இப்ப டைம் ஆறு மணி! நீங்க எதுக்கு வந்தீங்க ராகவன்? எனக்கு சென்னை புதுசா என்ன?”

“இல்லை மேடம்! உங்களை ரிஸீவ் பண்ணத்தான்…..!”

“நோ! டோண்ட் டு தட்! உங்க கார் இருக்கா?”

”யெஸ் மேடம்!”

“ஓகே! நீங்க போங்க! நா ஹோட்டலுக்குப்போய்க்கறேன்! இது நான் வளர்ந்த ஊர். எனக்கு வழி நன்றாகவே தெரியும்!”

ராகவன் மையமாகச்சிரித்து தலையாட்ட, வசுந்தரா தொடர்ந்தாள்

”அண்ட் ராகவன்! “போன வார சென்னை பிராஞ்ச் சேல்ஸ் 4.5% குறைவு! நாளைக்காலை ஒன்பது மணிக்கு மீட்டிங்! யூ பெட்டர் எக்ஸ்ப்ளெயின்!”

பக்கத்தில் வந்து நின்ற 99.90 லட்சம் விலைகொண்ட அந்த சில்வர் க்ரே மெர்ஸிடீஸ் என்னும் ரதத்தில் ஏறினாள். சௌகரியமாகக்காரில் சாய்ந்துகொண்டாள்.

“கொஞ்சம் தி நகர் பனகல் பார்க் வழியா போங்க!”

வெங்கட் நாராயணா ரோடில் தி நகர் கிளப்பைத்தாண்டி இடது பக்க வளைவில் திரும்பினதும் நிறுத்தச்சொன்னாள். அந்த நெரிசலில் டிரைவர் இடம் பார்த்து நிறுத்தினது திருமலை ஸ்டோருக்கு நேர் எதிரேவாக இருந்தது.

 

”தபாரும்மா! சாரதா வித்யாலயாதானே நீ? எயிட்த்தா? மீனாட்சி தானே மாத்ஸுக்கு வரா? பிளாஸ்டிக் ஸ்கேல் வாங்கிக்கோ! கட்ட ஸ்கேல்ல மீனாட்சி அடி நீ தாங்கமாட்டே!”

கடைக்கு முன் வந்து நின்ற மெர்ஸிடீஸையும் நேர்த்தியான காட்டன் குர்த்தியில் தலை மயிர் பறக்க கண்ணாடியைக்கழற்றியவாறே உள்ளே நுழைந்த பெண்ணையும் கண்டு ஒரு வித பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த வயதான ஒல்லி ஆசாமி பரபரப்புடன் கவனித்தார்,

“அய்யாசாமி அங்கிள்! சௌக்கியமா?”

வாங்கம்மா! நீங்க……… யார்னு சட்டுன்னு புரியலியே…?”

கண்களை இடுக்கிப்பார்க்க முயன்றார்.

“அங்கிள்! இங்க உக்காந்து முத்தமிழ்க்கட்டுரைத்துணைவனப்பார்த்து எழுதிக்கட்டுமா?”

“அடேடே! நீயா..நீங்களா? வசுந்தராவா? எங்கியோ பார்த்த ஜாடையாவே இருக்கேன்னு முழிச்சிண்டு இருக்கேன்! எத்தனை வருஷம்!”

“நானேதான் அங்கிள்!”

”வாம்மா வாம்மா! எப்படி இருக்கே? எங்க இருக்கீங்க?”

அய்யாசாமிக்கு கையும் காலும் பரபரத்து மரியாதை குழம்பியது.

“இங்க கீழ படியில உட்கார்ந்துக்கட்டுமா?”

“அய்யோ வசுந்தரா! மன்னிச்சுக்கோங்கம்மா! நீங்க முதல்ல உள்ள வாங்க! இங்க நாற்காலியில உட்காருங்க!”

இதற்குள் கடைக்கு வந்துவிட்ட இரண்டு காலேஜுப்பெண்கள், “சார்! ஷுக்லா க்ரேவல் மானேஜ்மெண்ட் அக்கவுண்டிங் இருக்கா?”

“அங்கிள்! நீங்க அவங்கள கவனிச்சுட்டு வாங்க! நா வெயிட் பண்றேன்!”

அய்யாசாமி பெண்களை நோக்கி நகர்ந்தார். வசுந்தரா அவரையே கண் கொட்டாமல் பார்த்தாள்.

 

சனிக்கிழமை. வெயில் வாட்டியது. கழுத்தில் உறுத்தின வேர்வையைக்கையால் துடைத்துக்கொண்டே பாவாடை தடுக்காமல் ஓரத்தில் பிடித்தபடி, தாவணியைச்சரி செய்துகொண்டு வசுந்தரா திருமலை ஸ்டோர் வாசலுக்கு வந்தாள்.

“வாம்மா வசுந்தரா! ரெண்டு நிமிஷம் தா. கஸ்டமருங்களை கவனிச்சிட்டு உங்கிட்ட வரேன்!”

“சரி அங்கிள்!”

திருமலை ஸ்டோரின் படிகளில் இறங்கி ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். எதிரே  பனகல் பார்க்கின் சுறுசுறுப்பைக்கவனிக்கலானாள். ”ணணங் ணணங்” என்று சைக்கிள் செயின் மட்கார்டில் உரசும் சப்தத்தோடு ஒரு கிழவர் கடக்க, தன் சகல பாகங்களும் முனக 12பி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கின இரண்டு மாமிகள் பரபரவென ரோடைக்கிராஸ் பண்ணி அருகாமை நல்லிக்குள் நுழைந்தார்கள். வசுந்தராவுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஒரு வேளை எழுதும்போது கடை முதலாளி வந்துவிட்டால், அய்யாசாமிக்கு வேலை போய்விடும் அபாயம் இருப்பது அவளை நர்வஸாக்கியது.

என்ன பண்ண?

பத்மா டீச்சர் சொல்லிவிட்டார்.

“இத பாரு வசு! முத்தமிழ்க்கட்டுரைத்துணைவன்னு பழனியப்பா பதிப்பகம் போட்ட ஒரு புஸ்தகம். வருஷா வருஷம், அதுலேர்ந்துதான் கட்டுரைக்கான கேள்வி வருது. அதனால அத நீ வாங்கி நன்னா படிச்சுக்கோ!”

பத்மா டீச்சர் அவள் மேல் தனி அக்கறை எடுத்து மத்த பசங்களுக்குச்சொல்லாமல் இவளுக்கு மட்டும் தனியாக சில டிப்ஸுக்களை வீசுவதுண்டு. இத்தனைக்கும் பத்மா ஹை ஸ்கூல் டீச்சரெல்லாம் இல்லை. வசுந்தரா எலிமெண்டரி ஸ்கூலில் படித்தபோது இரண்டாம் கிளாஸிலிருது ஐந்தாம் கிளாஸ் வரையிலான டீச்சர்தான். வசுவின் மேல் அபார அன்பு. கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்தாலும் எத்தனை சூடிகையாய் பொறுப்பாய் இருக்கிறாள் என்னும் அக்கரை. அதனாலேயே அவள் ஆறாவதுக்கு ஹை ஸ்கூல் போன பின்பும் அவளை வாரம் ஒரு முறை வரச்சொல்லி ரெகுலர் படிப்பையும் தாண்டி பல விஷயங்கள் சொல்லித்தந்தார். ஸ்கூல் ஃபைனல் வந்தபோது அடிக்கடி கூப்பிட்டு வெவ்வேறு புத்தகங்களிலிருதெல்லாம் பதில் எடுத்துத்தந்து வசு கிளாஸில் மற்றவர்களை விட வித்தியசமாக எழுத வைத்து முதலில் வர உதவி செய்தாள்.

வசுந்தரா ஆவலோடு திருமலை ஸ்டோர் வந்து முத்தமிழ்க்கட்டுரைத்துணைவன் கேட்டபோது அய்யாசாமிதான் கடையில் இருந்தான்.

“ஓ அதா? இந்தாம்மா! எம்ப்ளது ரூவாய்!”

“என்ன அங்கிள்?”

“எம்பதும்மா! எயிட்டி ருபீஸ்!”

வசுவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தயங்கி நின்றாள்.

“என்னம்மா காசு குறையுதா?”

இருவது ரூபாய்தான் வைத்திருந்தவள் எப்படிச்சொல்லுவாள்.

“ஆமா அங்கிள்! இருவது ரூபாய்தான் இருக்கு!”

அய்யாசாமி அவளை ஒருமுறை பார்த்தார்.

அழுத்தி வாரின பின்னல். பளிச்சென்ற குங்குமப்பொட்டு. தடிமனான பின்னி காடாத்துணியில் தைத்த பாவாடை. கிட்டத்தட்ட அதே துணி வகையில் தைத்த தாவணி. கழுத்தில் மெல்லியதாக ஒரு செயின். கைகளில் ரப்பர் வளையல். கண்களில் ஏழ்மையா இல்லை வசதியின்மையா?

“சித்த இரும்மா!”

கடைக்கு வந்த இன்னொரு கஸ்டமரை கவனித்துவிட்டு அவளிடம் வந்தார்.

“கஷ்டமா குழந்த?”

கண்ணில் நீர் கட்டிக்கொள்ள வசு தலையைக்கூட ஆட்ட முடியாமல் கூச்சத்தில் தவித்தாள்.

“நா ஒண்ணு சொல்றேன் செய்யறியா?”

மௌனம்.

“சனிக்கிழமை சனிக்கிழமை மூணு நாலு வாரத்துக்கு வா. வரும்போது நோட்டு ஒண்ணு எடுத்துண்டு வா. அந்தபுக்கைத்தரேன். ஓரமா உக்கார்ந்துண்டு ஒவ்வொரு கட்டுரையா நோட்டுல எழுதிண்டு போ. அப்படியே படிச்சு ரிவைஸ் பண்ணினா மாதிரி இருக்கும், என்ன?”

வசுவுக்கு இப்போது ஈரக்கண்களில் சிரிப்பு தெரிந்தது.

இதோ இன்று மூணாவது சனிக்கிழமை. இன்னும் அடுத்த வாரம் வர வேண்டியிருக்கும். அதற்குள் எல்லா கட்டுரைகளையும் காப்பி பண்ணிக் கொண்டுவிடுவாள்.

அய்யாசாமி கொடுத்த புத்தகத்தை அலுங்காமல் நலுங்காமல் வைத்து எழுதினாள்.

பப்ளிக் பரிட்சையில் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது ராங்க். ரிசல்ட் வந்த அன்று வசுந்தரா சந்தித்தது இரண்டே பேர்தான்.

பத்மா டீச்சர்!

அம்மா செய்து கொடுத்த ரவா கேசரியை டிஃபன்பாக்ஸுக்குள் வைத்து எடுத்துக்கொண்டு போனாள்.

“வாடி வாடி! கண்ணு! என் கனவ நெறைவேத்திட்டடி! இந்தா உனக்குதான்!”

கேசரியை அள்ளி அவள் வாயில் ஊட்டி கஞ்சிப்புடவை முடமுடப்போடு அணைத்துக்கொண்டபோது வசு அழுதாள்.

அடுத்து வசு போனது திருமலை ஸ்டோருக்குத்தான்.

அய்யாசாமி முதலாளியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“அட! வாம்மா வசுந்தரா! ரிசல்ட் வந்துட்டுதே! பாஸ் பண்ணிட்டியா?”

“இந்தாங்க அங்கிள்! ஸ்டேட்டுல செகண்ட் ராங்க்!”

“என்னது! ஸ்டேட் ராங்க்கா! சபாஷ்!சபாஷ்! சார்! இந்தப்பொண்ணு நம்ம கடையிலதான் புக் வாங்கும்! மறாக்காத தேடி வந்து ஸ்வீட் குடுக்குது பாருங்க!”

இப்போது முதலாளியும் சந்தோஷத்தோடு ஸ்வீட் எடுத்துக்கொண்டார்.

“இந்தாம்மா! உனக்கு என்னோட கிஃப்ட்!”

சட்டென்று கேஷ் பாக்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தார்.

“அவ்வளவு வசதி இல்லாத குடும்பம் சார்!”

அய்யாசாமி சொன்னான்.

“அம்மா! காலேஜுப்புஸ்தகங்கள் எல்லாம் உனக்கு ஐம்பது பர்சண்ட் டிஸ்கவுண்ட்டுல தரேன்! நல்லாப்படி! அய்யாசாமி! குழந்த வந்தா பார்த்து எடுத்துக்கொடு! என்னைக்கேட்கவே வாணாம்!”

இதோ இன்று வசுந்தரா திருமலை ஸ்டோரின் ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு பார்த்த அய்யாசாமி ஒடுங்கி மார்பு பின்னி முகத்தில் வெண்தாடி முட்களுடன் கன்னங்கள் ஒட்டிபோய் ஆனாலும் கண்களில் அந்த வெளிச்சத்துடனும் வேலையில் தீவிரத்துடனும் இயங்குவதைக்கவனித்தாள்.

பல வருடங்களுக்கு முன்னால் சூடான் தலைநகர் கார்த்தூம் தெரு ஒன்றில் ஸ்டாக்கை சூப்பர்மார்கெட்டில் டெலிவரி பண்ணிவிட்டு வரும் வழியில் திடீரென்று தீவிர வாதிகளின் தொடர் துப்பாக்கிச்சூடு ஆரமித்துவிட, தப்பித்து ஓடாமல் அந்தக்களேபரத்துக்கு நடுவிலும் தன் லாரியை ஓட்டிக்கொண்டு போய் குண்டடி பட்டு கால் முடமாகிப்போனவனை பின்னாளில் “ஏண்டா அந்த ஆபத்தில் லாரியை விட்டுவிட்டு நீ தப்பித்து ஓடவில்லை” என்று வசுந்தரா கேட்டபோது “லாரியில இன்னும் ரெண்டு வார ஸ்டாக் இருந்ததே” என்று பதிலளித்த ஆஸிஃப் மாஜித் நினைவுக்கு வந்தான்.

ஷுக்லா கிரேவல் வாங்க வந்திருந்த இரண்டு பெண்களும் கால் மாற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி ஆச்சரியப்பரவசத்துடன் வசுந்தராவைப்பார்த்தாள்.

கடையின் பின்புற அலமாரியிலிருந்து இரண்டு தலைகாணி சைஸ் புத்தகங்களை எடுத்து வந்தார் அய்யாசாமி.

“ஷுக்லா க்ரேவல் ரெண்டு பேருக்குமா? முன்னூத்தி அம்பது! இந்தாம்மா நீ ஒரு முன்னூத்தி அம்பது! பிகாம் ஜெனரல் தானே? ஆர் எல் குப்தாவிலேர்ந்தும் கேள்வி வரும்மா!”

இரண்டு பெண்களும் தயங்கினார்கள்.

”முன்னூத்தி ஐம்பதா? ஆன் லைன்ல 280ன்னு போட்டிருந்ததே!”

”அடேடே! இது ஷாப் விலையாச்சேம்மா! அந்த டிஸ்கவுண்ட் கடைக்கு வராதே!”

இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வசுந்தரா மெல்லிய குரலில் “அங்கிள்” என்றாள். திரும்பின அய்யாசமி அவள் கண்களின் ஜாடையைக்கவனித்தார். பெண்களிடம் திரும்பினார்.

“கொஞ்சம் இருங்கம்மா!”

மறுபடி உள்ளே போனார். சில நிமிடங்கள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் அதே புத்தகங்களுடன் திரும்பினார்.

“ரொம்ப லக்கிம்மா நீங்க ரெண்டு பேரும்! இந்த ரெண்டு காப்பிக்கு மட்டும் 20% டிஸ்கவுண்ட் இருக்கும்மா! பாத்தீங்களா? போன வருஷ எடிஷன்!”

பெண்கள் சந்தோஷத்துடன் காசைக்கொடுத்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு நகர்ந்தார்கள். இப்போது வசுந்தரா தன் ஹேண்ட்பேகிலிருந்து எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய்களை நீட்டினாள்.

“அங்கிள்! எனக்கு ஃபோர்ப்ஸ் இந்த மாச இஷ்யூவும் எகானமிஸ்டும் குடுங்க! நூத்தி நாப்பது ரூபாய் ஷுக்லா கிரேவாலுக்கு எடுத்துக்கோங்க!”

மிக உயர்தர உடையுடன் எங்கோ மும்பையில் கார்ப்பரேட் ஒன்றில் பெரிய நிலமைக்கு வந்துவிட்ட வசுந்தராவைப்பார்த்த அய்யாசாமிக்கு, அன்றொருநாள் டிஃபன் பாக்ஸில் ரவா கேசரி கொண்டு வந்து நீட்டின அந்தப்பாவாடை தாவணிப் பெண் ஒரு கணம் வந்துபோக, கண்ணில் நீர் கட்டிக்கொண்டது.


25 comments:

  1. படித்த ஞாபகம் ஆரம்பத்திலேயே வந்து விட்டது. மீண்டும் நெகிழ்ந்தேன். இன்னும் பெரிய உதவி செய்திருக்கலாம் என்றும் நினைத்தேன்.

    ReplyDelete
  2. ONCE AGAIN YOUR HUMANE TOUCH DUPER SIR
    MANAMARNTHA VAZTHUGAL. GOD BLESS YOU AND YOUR ENTIRE FAMILY FOREVER 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    ReplyDelete
  3. அருமையான முடிவு

    ReplyDelete
  4. என்ன ஒரு காருண்யம்... கதைகள் நம்மை பலப்படுத்துவதாக நம்பிக்கை உடையவையாக ஆத்மாவை மேலே எடுத்துச் செல்லும் குணமிக்கவையாக இருக்க வேண்டும்....உங்கள் கதைகள் மனிதத்துவத்தின் பெரிய பலம்....

    ReplyDelete
  5. அருமையான கதை. வேதாளம் கேள்வி. யார் தர்மவான்? அய்யாசாமியா,
    முதலாளியா அல்லது வசுவா? பின் இரண்டும் இருப்பதால் கொடுத்தார்கள். அய்யாசாமி கல்வி தானம் செய்தார். அவரே தர்மவான்.
    Waiting for the next.

    ReplyDelete
  6. Thirumalai stores Ayyasami கண்களில் நிற்கிறார். மனதில் இடம் பிடித்தார். Vasundhara vin நன்றி மறவாமை நெகிழ வைத்துவிட்டது. அருமை அருமை

    ReplyDelete
  7. அருமை மனிதாபிமானம் ஆஹா!

    ReplyDelete
  8. It is really an art to make the reader travel with the characters. Excellent as usual. The insert of the delivery truck driver character, here may probably find place somewhere. Or is it just a reflection of thoughts of Vasundhara?

    ReplyDelete
  9. Vasudevan Sethuraman7 July 2026 at 21:22

    It is really an art to make the reader travel with the characters. Excellent as usual. The insert of the delivery truck driver character, here may probably find place somewhere. Or is it just a reflection of thoughts of Vasundhara?
    PN : The earlier response [same] got posted as Anonymous. Hence reposted.

    ReplyDelete
  10. கண்களில் நீர் கட்டிக் கொண்டது அய்யாசாமிக்கு மட்டுமல்ல ..

    ReplyDelete
  11. புவனா முரளி8 July 2026 at 01:25

    எத்தனை முறை படித்தாலும்..கண்கலங்கும்.. மனம் நெகிழும்..

    ReplyDelete

  12. எப்பவோ படித்தது ஞாபகம் வருகிறது. கூடவே, பள்ளி நாட்கள்.

    ReplyDelete
  13. படா ஷோக்கா இருக்கு சார்.
    Nicely written.

    ReplyDelete
  14. JR, எனக்கு பாவாடை தாவணி வசு தான் பிடிச்சுருக்கு. ரவா கேசரியும் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  15. Achuthanandam

    ReplyDelete
  16. Achuthanandam

    ReplyDelete
  17. A touching story, Raghu.

    ReplyDelete
  18. ரவா கேசரி" — பாலு மகேந்திராவின் 'கதை நேரம்' பார்த்த உணர்வைத் தந்த அருமையான படைப்பு. சுவை குறையாத கேசரியைப் போல அற்புதம்! அதில் தூவப்பட்ட முந்திரி, திராட்சை, ஏலக்காய் மணம் போல, கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அருமை. ரேவதி

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. நான் பள்ளியில் (மதுரையில்) படித்தபோது இது போல நோட்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ராவாக வாங்கி அப்பாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று, மதுரை டவுன்ஹால் ரோடிலிருந்த (இப்போதும் இருக்கிறதா என்று தெரியாது) இன்ஸானியா புக் ஷாப் எனும் கடையில் கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் என்று நோட்ஸ்களை கடன் வாங்கி, கடைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து என் நோட்டில் காப்பி செய்தது உண்டு.


    நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் / செகண்ட் எல்லாம் வரவில்லை. ஸ்கூல் செகண்ட் தான் வந்தேன்.....என்ன, கடைக்காரருக்கு ஸ்வீட் கொடுக்க வேண்டும் என்கிற விவரம் கூட அப்போது எனக்கு இல்லை என்பது உண்மை.


    அந்தப் பசுமையான நினைவுகளை மறுபடியும் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய உங்களுடைய அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  21. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற உதவும் தேவதைகள் இருந்திருப்பார்கள். குறிப்பாக 60-கள் மற்றும் 70-களில் பெரும்பாலான குடும்பங்கள் ஏழைகளாகவோ அல்லது நடுத்தர வர்க்கத்தினராகவோ இருந்தபோது, எனது கல்லூரி நாட்களில், ஒரு பாலிடெக்னிக்கில் துணை முதல்வராக இருந்த என் மாமா திரு. சீனிவாசன் அவர்களும், எங்கள் கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் உப்பிலி அவர்களும் ஒவ்வொரு வருடமும் எனக்கு நூலகப் புத்தகங்களைத் தாங்கள் பெற்றுத் தருவார்கள்; ஏனெனில் என்னால் கல்லூரிப் புத்தகங்களை விலைக்கு வாங்க இயலவில்லை. ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைத் தவிர, மற்ற அனைத்தையும் இந்த நல்ல உள்ளங்கள் மூலமாகவும், மற்றும் கல்லூரியின் புத்தக வங்கியிலிருந்தும் (Book Bank) பெற்று நான் கல்லூரிப் படிப்பை சமாளித்தேன்.

    இந்த ரவா கேசரிப் பதிவை நான் ஈரக்கண்களுடன் படித்தேன் என்று தனித்துக் கூறத் தேவையில்லை.

    எனது அருமை நண்பர் ரகுவிற்கு மிக்க நன்றிகள்.; நீங்கள் அற்புதமான மனிதர். உங்கள் படைப்புகளும் அற்புதம்!

    அன்புடன்
    சுந்தர்

    ReplyDelete
    Replies
    1. சுந்தர், உங்களுக்கு நன்றி சொன்னால் எப்படிப்போதும்!!

      Delete
  22. கேசரி போல் இனிக்கிறது கதை 👌🌹

    ReplyDelete
  23. சென்னை கார்த்திக்13 July 2026 at 10:51

    வாழக்கை தான் எத்தனை அழகு, எவ்வளவு சுவாரஸ்யங்கள், எளிமையான மனிதர்கள், வாழ் நாள் முழுவதும் தொடரும் நெகிழ்ச்சியான நினைவுகள்….மெல்லிய உணர்வுகளை அழகாக சொல்லும் கதை சொல்லிகள்…

    மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம்

    ReplyDelete